Skip to main content

ஜெயலலிதா வழியில் எடப்பாடி! சீனியர் செங்கோட்டையன் ஜுனியர் இ.பி.எஸ்க்கு புகழாரம்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

admk minister sengkottayan

 

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் விழா ஈரோட்டில் அவர் பிறந்த இல்லத்தில் இன்று அரசு சார்பில் நடைபெற்றது. ஈரோட்டில் பெரியார் பிறந்த இல்லம் அரசு அருங்காட்சியகமாக 'பெரியார் - அண்ணா நினைவகம்' என்ற பெயரில் உள்ளது. இன்று தந்தை பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவி, வங்கிக் கடனுதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து  அவர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டின் முதல்வராக மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தபோது பெரியாரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெரியார் கல்லூரிக்கு கட்சியின் சார்பில் நிதி உதவி வழங்கியதோடு தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில், அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு 'பெரியார் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்சிகளைக் கடந்தும் ஒவ்வொரு தலைவர்களும் பெரியாரைப் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக பணியாற்றிவர் தந்தை பெரியார். பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி புரிந்தனர். அப்படித்தான் இப்போதும் ஜெயலலிதாவின் வழியில் நம்ம எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு நாடு எப்படிச் சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு தந்தை பெரியார் உதாரணமாக விளங்கினார். தமிழகத்தில் 1967 -க்குப் பிறகு திராவிட இயக்கம் வேரூன்றி இன்றும் நிலைத்து நிற்பதற்கு பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம்" என்றவர் மேலும், "தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் என்றைக்கும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கூடுதல் பள்ளிக் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்களின் மனநிலை மற்றும் கரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் "என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.