
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரு வெவ்வேறு ஆய்வகங்களில் கடந்த ஆண்டு ஜூலை 6 மற்றும் 12ஆம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் மாநில போலீசார் தலைமையில் விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனர் ராஜசேகர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டைரி நிறுவனம் மற்றும் ஸ்ரீகாளகஸ்தியைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு டைரி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என 15 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளராக பணிபுரிந்த அப்பண்ணா, தேவஸ்தானத்தின் முன்னாள் இணை செயல் அதிகாரியாக இருந்த அதிகாரிகள் மற்றும் கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டபோது பணியில் இருந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து ஒரு வாரக் காலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (06.06.2025) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதில், “தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டது நெய்யே கிடையாது. அதாவது நெய் விநியோகம் செய்த போலோ பாபா டைரி நிறுவனத்தினர் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யவில்லை. பாமாயில் மற்றும் இதர ரசாயனங்களைக் கலந்த கலவையையே நெய் எனக் கூறி தேவஸ்தானத்திற்கு விநியோகம் செய்தனர்” எனத் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரும்போது சாட்சிகளை மிரட்டி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

எனவே இந்த குற்றச்சாட்டுகளில் உள்ளவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைக்கும் விதமாகச் செயல்படுவார்கள். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனையடுத்து இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “வரும் 17ஆம் தேதி (17.06.2025) ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தனர்.