
பட்டியலின மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டுமென பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பேசியதாகக் கூறப்படும் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
தெலுங்கானா மாநில சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்ககத்தின் (TGSWREIS) செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அழகு வர்ஷினி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். பட்டியலின குருகுல பள்ளி மாணவர்கள் குறித்து அழகு வர்ஷினி பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி அழகு வர்ஷினி பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், ‘இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆடம்பரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் கழிப்பறைகளைத் தாங்களே சுத்தம் செய்ய வேண்டும், சமைக்க வேண்டும், அறைகளைத் துடைக்க வேண்டும்.
அவர்கள் ரொட்டி செய்ய வேண்டியிருந்தால், அவர்கள் ரொட்டி செய்வார்கள். மிகவும் நல்லது. அவர்கள் அறை சுத்தம் செய்ய வேண்டும். அவர்களின் அறைகளை யார் சுத்தம் செய்வார்கள்? ஒரு முறை, துப்புரவு பணியாளர் செய்வார்கள். அவர்களால் ஏன் தங்கள் கழிப்பறைகளை தாங்களே சுத்தம் செய்ய முடியாது? அதில் என்ன தவறு இருக்கிறது? இது ஒரு குழந்தையின் வளரும் கட்டம். நான் ஆடம்பரத்தை கொடுக்க முடியாது. எனக்கு சமைக்கத் தெரியாது, எனக்கு படிப்பு மட்டுமே தெரியும் என்று ஒரு பயனற்ற நபராகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார். இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அழகு வர்ஷினிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஐ.ஏ.எஸ் அதிகாரி அழகு வர்ஷினி கூறிய கருத்துக்கள் தொடர்பாக தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் தெலுங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் குறித்து விரிவான தகவல்களை 15 நாட்களுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மாநில எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அழகு வர்ஷினியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “240 பள்ளிகளில் உதவி பராமரிப்பாளர்களை அரசாங்கம் நீக்கியுள்ளது, இதனால் மாணவர்கள் வார்டன்களாகவும் சமையலறைகளை நிர்வகிக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்போது அந்த அதிகாரி குழந்தைகளை பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துகிறார். இந்த நடத்தை பாரபட்சமானது, சுரண்டல். மேலும் இது குழந்தை உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும்.
இது ரேவந்த் ரெட்டி அரசாங்கத்தின் ஏழை, பட்டியல் சாதி விரோத அணுகுமுறையை மட்டுமே பிரதிபலிக்கிறது. அந்த அதிகாரியை நீக்கிவிட்டு, சமூக நலப் பள்ளிகளை முறையாக நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்கத் தொடங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்” எனப் பதிவிட்டார்.