Skip to main content

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் காலமானார்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramoji Film City Founder Ramoji Rao Passes Away

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராமோஜி ராவின் மறைவுக்குத் தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி. கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடகத்துறையின் முன்னோடியாகவும், தகவல் துறையில் பல சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்களுக்கு முன்னோடியாகவும் இருந்த ராமோஜி ராவ் இன்று மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றியவர் ஆவார்.

ராமோஜி ராவின் மறைவு தெலுங்கு ஊடகத்துறைக்கும், தொலைக்காட்சித் துறைக்கும், தெலுங்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை; சிறப்பு அறிவிப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Telangana Govt announced a special notification on A baby born at a bus station

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக இந்த பேருந்து நிலையத்திற்கு வந்தார். 

அப்போது குமாரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதில் பதற்றமடைந்த அவரது கணவர் உதவிக்காக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்தார். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானதால், அங்கிருந்த போக்குவரத்துக் கழக பெண்கள் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில், குமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, தாயையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்து நிலையத்திலேயே பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்த சம்பவம் அம்மாநிலம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் ஒரு அற்புதமான அறிவிப்பை அறிவித்தது. அதில், பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; லாரி டிரைவர் அதிரடி கைது!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Incident happened on 6 years girl in telangana

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் நேற்று இரவு அங்குள்ள அரிசி ஆலைக்கு வெளியே தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான பால்ராம் என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று அருகே உள்ள முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். 

திடீரென்று நள்ளிரவில் சிறுமியின் தாயார் கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது, அவரது மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், தாயுடன் சேர்ந்து சிறுமியைத் தேடி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள முட்புதர் ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பால்ராமை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில், பால்ராம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் பால்ராம் சிறுமியைத் தோளில் சுமந்துகொண்டு அருகில் உள்ள முட்புதருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.