
அரசு சுகாதார மையத்தில் மொபைல் போன் வெளிச்சத்தில் நான்கு பெண்களுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பெருவார்பாரியில் அரசு சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார மையத்தில் கர்ப்பிணிப் பெண்களான ராஜ்பூரைச் சேர்ந்த நீது தேவி, அச்சூஹியைச் சேஎர்ந்த மஞ்சு தேவிம் அதாரைச் சேர்ந்த பிங்கி தேவி மற்றும் அபயலைச் சேர்ந்த ரசியா கத்தூன் ஆகியோர் பிரசவத்திற்காக கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பெண்களுக்கும், மொபைல் போன் வெளிச்சத்தில் பிரசவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க துணை தலைமை மருத்துவ அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் சஞ்சீவ் பர்மன் கூறுகையில், ‘பெருவார்பாரியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூன்று நாட்களுக்கு எரிந்துள்ளதால், இந்த சம்பவம் நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுகாதார மையத்தில் ஒரு ஜெனரேட்டல் மற்றும் டீசல் இருந்தபோதிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.