Skip to main content

"நூற்றுக்கணக்கான சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்தது நீங்கள்தான்" - ஜெ.பி.நட்டா பதிலடி...

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

nadda reply to manmohan singh

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கையை மேற்கோள்காட்டி, அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா. 

 

இந்தியா, சீனா இடையே நடைபெற்ற மோதல் குறித்து மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது வீரர்களின் தியாகத்திற்கு உரிய நீதியை வழங்கிட பிரதமர் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் சரியான நீதி வழங்கப்படவில்லை எனில், அது வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். ஏப்ரல் 2020 க்குப் பின்னர் இன்றுவரை பல ஊடுருவல்களை மேற்கொண்டு கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரி போன்ற இந்தியப் பகுதிகளுக்கு சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக உரிமைக் கோருகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜெ.பி.நட்டா, "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வாய் வார்த்தைதான். துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் நடத்தை, நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற அறிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். நினைவில் கொள்ளுங்கள், இதே காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் நமது ராணுவத்தைக் கேள்வி கேட்டு மனச்சோர்வை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியப் பிரதேசத்தின் 43,000 கி.மீ. தொலைவுக்கு மேல் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டது. ஒரு சண்டை கூட இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி சீனாவிடம் சரணடைந்தது. அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தைச் சீனாவிடம் ஒப்படைத்தார். 2010 முதல் 2013 வரை சீனா மேற்கொண்ட 600 ஊடுருவல்களும் அவர் பிரதமராகி இருந்தபோதே நடைபெற்றன" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
JP Natta vehicle rally issue Judge orders action

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேர்தல் பரப்புரையில் இருந்து குஷ்பு விலகலுக்கான காரணம் என்ன?

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Khushbu withdrawal from election campaign

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தேர்தல் பரப்புரை பணிகளில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் தனது முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். என்னை பாஜகவிற்காக அர்ப்பணித்துள்ளேன்.

பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன். ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக மருத்துவரின் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.  முதுகு தண்டுவட எலும்பின் காயம் விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை” என குறிப்பிட்டுள்ளார். குஷ்பு நேற்று வடசென்னை பா.ஜ.க. வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.