Skip to main content

பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சேற்றில் சிதறி கிடக்கும் காலணிகள்!

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

Pahalgam incident Shoes scattered in the mud

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் பஹல்காம் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதோடு ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பைசரன் புல்வெளிக்குச் செல்லும் பாதையில் ஈரமான சேற்றில் சிதறிய நிலையில் காலணிகள் புதைந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளன. இது நேற்று முன்தினம் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது அச்சத்தில் காலணிகளை சுற்றுலா பயணிகள் அங்கேயே விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 25 இந்தியர்கள் உட்பட நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் என  26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் என்ற பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஜான்டு அலி ஷேக் என்பவர் வர் படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் ஜான்டு அலி ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சார்ந்த செய்திகள்