
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ், இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்தது. இருந்த போதிலும், புது புது வடிவங்களில் உருமாறி வந்தது. ஆனால், அந்த வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 2,000 பேர் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளது.
அதன்படி கேரளாவில் 1,435 பேருக்கும், மகாராஷ்டிராவில் 506 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 483 பேருக்கும், குஜராத்தில் 338 பேருக்கு, கர்நாடகாவில் 250 பேருக்கும், தமிழ்நாட்டில் 189 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒருவர் என 4 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோ வேறு இணைநோய் உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.