Skip to main content

எல்.ஐ.சி.பங்குகளை வாங்குபவர்களின் கவனத்திற்கு! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

LIC Attention shareholders!

 

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று (04/05/2022) தொடங்குகிறது. 

 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சுமார் 22 கோடி பங்குகளை விற்று ரூபாய் 21,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. உக்ரைன் போரால் பங்கு வெளியீடு தள்ளிப்போன நிலையில், திங்கள்கிழமை மிகப்பெரிய முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டு நாட்களில் மட்டுமே ரூபாய் 5,620 கோடிக்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 

பொதுமக்கள், எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு விற்பனை இன்று (04/05/2022) தொடங்குகிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற எல்.ஐ.சி.யின் பங்குகளை வாங்குவதற்கு கடும் போட்டி இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு பங்கின் விலை ரூபாய் 902 முதல் ரூபாய் 949 வரை இருக்கும் என எல்.ஐ.சி. நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவர் ஆர்.குமார் அறிவித்துள்ளார். 

 

22 கோடி பங்குகளில் எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு 15.81 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு ஒதுக்கீட்டில் 15 பங்குகள் இருக்கும் என்றும், ஒருவர் அதிகபட்சமாக 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறைந்தபட்சமாக 14,235 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூபாய் 60 தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூபாய் 40 தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் மே 9- ஆம் தேதி வரை தங்களுடைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கின் விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்று முடிவு செய்யப்படும் என்று எல்.ஐ.சி. கூறியுள்ளது. அதன்பிறகு, வரும் மே 17- ஆம் தேதி அன்று முதல் இந்திய பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். 

 

 

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதால், பாலிசிதாரர்களுக்கு இழப்பு ஏற்படும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்