
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவுகளில் இருந்து இந்தியா பின்வாங்காமலேயே இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்ததற்கு பிறகு, எந்தவொரு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்காமல் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 15ஆம் தேதி முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்போவதாக தொடக்கத்திலேயே பாகிஸ்தான் ராணுவத்திற்கு செய்தி அனுப்பியதாகத் தெரிவித்தார்.
ஜெய்சங்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது ஒரு குற்றம் என்றும், இதனால் நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கிடையில், இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது தற்போது விவாதப் பொருளாக மாறி வருகிறது.
இந்த நிலையில், இழப்புகள் முக்கியமில்லை இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் தான் முக்கியம் என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்’ என்ற தலைப்பில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் விரிவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “மே 10ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தானின் குறிக்கோள் 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைப்பதாக இருந்தது. பல தாக்குதல் நடத்தப்பட்டன, ஏதோ ஒரு வகையில் அவை மோதலை அதிகரிக்க வைத்தது. நாங்கள் உண்மையிலேயே பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கினோம். 48 மணி நேரம் தொடரும் என்று நினைத்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள், சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தன.
மே 10 அன்று இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது. பேச்சுவார்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான கோரிக்கை பாகிஸ்தானிடமிருந்து வந்தபோது, நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். தொழில்முறை ராணுவப் படைகள் பின்னடைவுகள் மற்றும் இழப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. பாகிஸ்தான், இந்தியாவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிணைக் கைதியாக வைத்திருக்க முடியாது. போரில் இழப்புகள் முக்கியமில்லை, இலக்கை அடைவது முக்கியம். அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் பாகிஸ்தானில் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். போரில் இழப்புகள் முக்கியமில்லை என்று பாதுகாப்பு படைத் தலைவர் கூறியிருப்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.