
இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மிருகக் கண்காட்சியில் புதிதாக பிறந்த பென்குயின்களுக்கு மராத்தி பெயர்கள் வைக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் மகாராஷ்டிராவில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பைகுல்லா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் நிதின் பங்கர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிதின் பங்கர், “வீர்மாதா ஜிஜாபாய் போசலே தாவரவியல் உத்யான் மற்றும் ராணி பாக் என்று அழைக்கப்படும் மிருகக் கண்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பென்குயின்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது அவற்றின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்தன. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
ஆனால், மகாராஷ்டிராவின் மண்ணில் இங்கு பிறக்கும் பென்குயின் குஞ்சுகளுக்கு மராத்தி பெயர்கள் வழங்கப்பட வேண்டும். இது குறித்து பிரஹன்மும்பை நகராட்சி நிர்வாகத்திற்கு கூட கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. பலமுறை முறையிட்டாலும் கேட்கப்படவில்லை, எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருந்தால், சில பென்குயின் குஞ்சுகளுக்கு ஏன் மராத்தி பெயர்களை வைக்க முடியாது?” என்று பேசினார்.