Skip to main content

மல்லையா, நீரவ் மோடி எல்லாம் என்ன? அதானி அதுக்கும் மேல!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
ADani

 

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது வைரவியாபாரி நீரவ் மோடியின் மெகா மோசடி. இது ஒருபுறமிருக்க விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. 

 

தங்கள் பணங்களை பாதுகாக்க வங்கிகளில் டெபாசிட் செய்யும் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவைக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பவன் வெர்மா, அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானியின் மீது வாராக்கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கினார். மேலும், பொதுத்துறை வங்கிகளில் அவர் திரும்பச் செலுத்தாத இமாலயத் தொகையை பட்டியலிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

 

மாநிலங்களவைக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின் போது பேசிய பவன் வெர்மா, ‘இந்தியாவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய வங்கிகளுக்குத் திரும்பி செலுத்தவேண்டிய கடன்தொகை மட்டும் ரூ.5 லட்சம் கோடி. அதில் ஏறக்குறைய ரூ.1.4 லட்சம் கோடியை லான்கோ, ஜி.வி.கே., சுஜ்லான் எனர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான கம்பெனி மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாமல் இருக்கின்றன. அரசுக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே என்ன உறவு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதானி மாதிரியான பெருமுதலாளிகள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்வதில்லை. மோடியும் தான் எங்கு சென்றாலும், கூடவே அதானியை அழைத்துச் செல்கிறார்’ என்றார்.


இந்த உரை நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்பிற்காக மோடி தலைமையிலான அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே காலக்கட்டத்தில்தான் LoU கடிதங்கள் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை விட 8 மடங்கு அதிகமாக கடன்வாங்கிவிட்டு, அதைத் திரும்பச் செலுத்தாமல் நாட்டுக்குள்ளேயே சுதந்திரமாக, செல்வாக்கோடு இருக்கிறார் கவுதம் அதானி. எந்த வங்கியின் ஏஜெண்டுகள் அவர் நிறுவனத்தை ஜப்தி செய்வார்கள்?

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.