Skip to main content

“கட்சி ஆபீஸ் சாவியை தவிர எடப்பாடியிடம் என்ன இருக்கு; சின்னமே இல்லாம மெகா கூட்டணியா...” - டிடிவி தினகரன் கிண்டல்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

 

,m


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அமித்ஷா வருகையின் போது வாய் தவறிப் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவே அவர் சென்றதாகப் பன்னீர் அணியினர் எடப்பாடியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். 

 

இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மிகப் பிரமாண்டமான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் கட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அப்போதே சூடுபிடித்திருந்த நிலையில் இதுதொடர்பாக அடுத்த நாள் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் எடப்பாடியுடன் கூட்டணிக்கு வருகிறேன் என்று யாராவது அவரிடம் சொன்னார்களா? அவர் எங்களை வேண்டாம் என்று சொல்ல என்ன இருக்கிறது; அவரையே நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன் இதுதொடர்பாக பேசியதாவது, " அதிமுகவில் எடப்பாடி அணியில் என்ன இருக்கிறது என்று அவர் மெகா கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார் என்று தெரியவில்லை. கட்சியின் சின்னம் இல்லை; ஆனால் நாங்கள் மெகா கூட்டணிக்குத் தயார் என்று போகும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார். கட்சியின் அலுவலகத்தையும், பேரையும் வைத்துக்கொண்டு எப்படித் தேர்தலில் நிற்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எடப்பாடியிடம் அது இரண்டு மட்டும்தான் இருக்கிறது. 

 

தன்னிடமும் ஒரு கட்சி இருக்கிறது; நானும் தேர்தலில் நிற்க விரும்புகிறேன் என்ற நினைப்பில் பேசுகிறார். கூடுதலாக அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பதால் நாம் கூறினால் அனைவரும் நம்புவார்கள் என்று கூறி வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விடுகிறார். ஆனால் அது எதுவுமே சாத்தியமில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவரை எந்தக் கட்சியும் நம்பவும் நம்பாது. அவரின் கடந்த கால வரலாறு அப்படி. எனவே அவரை நம்பி கூட்டணிக்கு நாங்கள் மட்டும் அல்ல, யாரும் செல்லமாட்டார்கள். அப்படி நடந்தால் அது தேர்தல் தோல்விக்கு முதல் ஆரம்பமாகத்தான் இருக்கும்.


சின்னம் எங்கே முடங்கியது என்று கேட்கிறீர்கள்; ஆனால் முறையாக இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை என்றாலும் முடக்கப்பட்ட நிலையில் தானே சின்னம் இருக்கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் அக்கட்சிக்குக் கிடைத்ததா? இதற்கு எடப்பாடி விளக்கம் கொடுக்க முடியுமா? இவர் மெகா கூட்டணி அமைப்போம் என்கிறார். இவருடன் கூட்டணி குறித்த கேள்வியைத் தொடர்ந்து கேட்கிறீர்கள், இந்த டுபாக்கூர் அணியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. இந்த இருவரும் இணைவது தொடர்பாகக் கேட்கிறீர்கள், அவர்களை ஏற்கனவே யார் இணைத்தார்களோ அவர்கள் நினைத்தால் மீண்டும் இணைவார்கள். அதைத்தவிர வேறு வாய்ப்பில்லை, எனக்கும் அவர்கள் இணைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பும் இல்லை.


 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.