Skip to main content

பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டால் சஸ்பெண்ட்! கல்வித்துறை வினோத 'அப்ரோச்' - பொதுமக்கள் கொந்தளிப்பு!! 

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
அரசு உயர்நிலைப்பள்ளி

 

சேலத்தில் அரசுப்பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவரை மாவட்டக் கல்வி நிர்வாகம் திடீரென்று பணியிடைநீக்கம் செய்திருப்பது பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 675 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு முரளீந்திரன் என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வகுப்புக்கு வராமல் வெளியே சென்று விடுவதாகவும், தனக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர் ஒருவரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு திடீரென்று புகார்கள் சென்றன. 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
முரளீந்திரன்

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஓ) முருகன் டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் புகாரில் கூறப்பட்ட சங்கதிகள் உண்மை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி ஆசிரியர் முரளீந்திரனை அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 (இ) பிரிவின் கீழ் பணியிடைநீக்கம் செய்து சிஇஓ உத்தரவிட்டார். அதேநேரம், ஆசிரியர் முரளீந்திரன் மீது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. 

 

இந்நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தகவல் கசிந்ததை அடுத்து டிசம்பர் 23 ஆம் தேதி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே சாலையில் ஒன்று திரண்டனர். பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோரியும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
சாலையில் திரண்ட பள்ளி மாணவர்கள் 

 

இது தொடர்பாக கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் நாம் நேரில் விசாரித்தோம். ''எங்கள் பள்ளி 2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்போதுள்ள குன்று புறம்போக்கு இடத்தில் புதிதாக உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்காக அரசு இடம் ஒதுக்கியது. பள்ளிக் கட்டடத்தை பொதுப்பணித்துறை கட்டிக் கொடுத்தது.

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
சாலை அமைப்பதற்கு முன்பு

 

ஆரம்பத்தில் இந்தக் குன்று புறம்போக்கு பகுதி கரடுமுரடாகவும் மேடாகவும் இருந்து. இதை செப்பனிட்டு சிமெண்ட் சாலை அமைத்து சுற்றிலும் பாதுகாப்பு சுவர் எழுப்பி நுழைவு வாயில், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைக் கட்டினோம். இந்தப் பணிகளுக்கான செலவினங்களை தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், எங்கள் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்ற நன்கொடை வாயிலாகச் செய்து கொண்டோம். 

 

கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாரதி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ரங்கசாமி அய்யாவும், எங்கள் பள்ளி ஆசிரியர் முரளீந்திரனும் 60 லட்ச ரூபாய் வரை நன்கொடை வசூலித்து கொஞ்சமும் தன்னலம் பாராமல் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையா? ஆசிரியர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவையா? கட்டுமானப் பணிகளுக்கான இரும்பு கம்பிகள், சிமெண்ட், மணல் லோடு வந்துள்ளதா? என எதுவாக இருந்தாலும், 'முரளீந்திரனை கூப்பிடுங்கள்...' என்றுதான் சொல்வோம். 

 

அதற்காக அவர் வகுப்பறையில் கவனம் செலுத்தாமல் இல்லை. நன்கொடை மூலம் நடந்து வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை அவர்தான் மேற்பார்வையிட்டுச் செய்து வருகிறார். அதே வேளையில், பாடம் நடத்துவதிலும் கவனம் செலுத்தித்தான் வருகிறார். கூடுதலாக ஒரு ஆசிரியர் தேவை என்பதால் பி.டி.ஏ மூலமாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்து இருந்தோம். அவரை முரளீந்திரன்தான் தற்காலிகமாக நியமித்து, தனக்குப் பதிலாக பாடம் நடத்த வைத்தார் என யாரோ தவறாகப் புரிந்து கொண்டு புகார் அனுப்பி இருக்கிறார்கள். கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகளில் தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டு, எத்தனையோ மாதம் தனது சம்பளத்தை அப்படியே பள்ளிக்காக வழங்கிய நல்லாசிரியரை பணியிடைநீக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது'' என்கிறார்கள் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
மேனகா

 

பள்ளி கட்டுமானத்திற்காக தனது ஊதியத்தை பலமுறை அப்படியே செலவிட்டிருக்கிறார் முரளீந்திரன். அவருடைய மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதால் அதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளதும் நமது விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மேனகாவிடம் கேட்டபோது, ''கற்பித்தல் மற்றும் பள்ளி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முரளீந்திரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

 

அவருக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனோ அல்லது அவரை பள்ளியை விட்டு வெளியேற்றி விட்டால் எங்கள் பள்ளியின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்று கருதியோ யாராவது புகார் செய்திருக்கலாம் எனக் கருதுகிறோம். அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும்படி எஸ்.எம்.சி குழு சார்பில் தீர்மானம் போட்டிருக்கிறோம்'' என்றார். 

 

இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் குபேரனிடம் விசாரித்தபோது, ''சிஇஓ, எங்கள் பள்ளியில் விசாரணைக்கு வந்த நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அவர் பள்ளிக்கு வருவதே இல்லை என்றும், தனக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் கூறப்படும் புகாரின் பேரில் தான் சிஇஓ நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், முரளீந்திரன் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் முறையாகப் பணிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
ரங்கசாமி

 

பாரதி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ரங்கசாமி, ''பள்ளியில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை கவனித்துக் கொள்ளும்படி பள்ளியில் கேட்டுக் கொண்டேன். அதன்பேரில், ஆசிரியர் முரளீந்திரனும் ஏராளமாக நன்கொடை வசூலித்துக் கொடுத்தார். விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவார். அவர் மீதான நடவடிக்கைக்கு நானும் மறைமுகமாக ஒரு காரணம் ஆகிவிட்டேனோ என நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது'' என்றார். 

 

பள்ளியில் என்னதான் நடந்தது என்று ஆசிரியர் முரளீந்திரனிடமே கேட்டோம். “சிஇஓ, எங்கள் பள்ளிக்கு விசாரணைக்கு வந்த நாளன்று நான் பள்ளியில்தான் இருந்தேன். காலை பிரேயர் நேரம் முடிந்த பிறகு, என் மீது ஏதோ புகார் வந்திருப்பதாகவும், அது தொடர்பாக மாணவர்களிடமும், சில பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்.

 

என்ன புகார் என்று என்னிடம் எதுவும் விசாரிக்கவில்லை. திடீரென்று, டிசம்பர் 12 ஆம் தேதி பணியிடைநீக்கம் செய்து சிஇஓ உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு டிசம்பர் 22 ஆம் தேதிதான் எனக்கு 'மெமோ' வழங்கப்பட்டது. ஏன் இந்தத் தாமதம் என்று தெரியவில்லை. பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் முழுக்க முழுக்க ஸ்பான்சர்கள் மூலம் தான் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளையும் நான் தான் மேற்பார்வையிட்டு வருகிறேன். ஸ்பான்சர் கேட்டும், கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் சென்று விடும் நேரங்களில், பிடிஏ மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் திவ்யா என்பவர் என்னுடைய வகுப்பை எடுத்து வந்தார்.

 

எனக்கு மட்டுமின்றி, உடற்கல்வி ஆசிரியர் அல்லது வேறு யாரேனும் விடுப்பில் சென்றிருந்தால் அவர்தான் மாற்று ஆசிரியராகச் சென்று வகுப்பை கவனித்துக் கொள்வார். மற்றபடி, ஒருபோதும் கற்பித்தல் பணியில் நான் அலட்சியமாக இருந்தது இல்லை. கட்டுமானப் பணிகள் மேற்பார்வையிடலை நான் இல்லாவிட்டாலும், வேறு யார் செய்தாலும் அவர்களின் வகுப்புகளும் பாதிக்கப்படத்தான் செய்யும். சிஇஓவின் நடவடிக்கையை நான் விமர்சிக்க முடியாது. நான் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் ஆசிரியர் முரளீந்திரன். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
முருகன்

 

சிஇஓ முருகனிடம் கேட்டபோது, ''ஆசிரியர் முரளீந்திரன் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாமல் வெளியே சென்று விடுவதாகவும், தற்காலிக ஆசிரியரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களிடம் விசாரித்தபோது, பிடிஏ மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியவில்லை என்று கைப்பட எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறோம். 

 

ஆசிரியர் முரளீந்திரன், பள்ளியில் ஸ்பான்சர்கள் மூலம் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை முன்னின்று செய்து வருவது உண்மைதான். அதேநேரம், ஆசிரியர் பணி என்பது கற்பித்தலும் அதைச் சார்ந்ததும்தான் என்பதை மறந்துவிட்டு ஒரு கிளர்க் போல பணியாற்றி வருகிறார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் கூட, அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கிறார். இப்போது பொதுமக்கள், மாணவர்களைத் தூண்டிவிட்டு அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வைத்திருக்கிறார்'' என்றார். 

 

சம்பளப் பட்டியல் தயார் செய்தல், பள்ளிக்கான உபகரணங்களை வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், ஆசிரியர் வருகை, குழந்தைகள் வருகை என பதிவேடு பணிகளிலேயே இப்போதும் அனைத்துப் பள்ளிகளிலும் யாராவது ஓரிரு ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஈராசிரியர் பள்ளிகளில் அதில் ஓராசிரியர் பள்ளியிலேயே இருப்பதில்லை. சிஇஓ, டிஇஓ அலுவலகம் சார்ந்த பணிகள், சொந்த வேலை என ஊர் சுற்றுவதும் கண்கூடு. 

 

இது ஒருபுறம் இருக்க, கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் என்பது அப்பள்ளிக்கு அடுத்த நூறு ஆண்டுகளுக்குப் பயனளிக்கக் கூடியது. அப்பணிகளை ஆசிரியர் முரளீந்திரன், நேரம் காலம் பாராது அர்ப்பணிப்புடன் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். அவரால் விளையும் பயனை, தொலைநோக்குடன் சீர்தூக்கி பார்த்து, 'மிகைநாடி மிக்கக் கொளல்' என்ற அளவிலாவது மாவட்டக் கல்வி நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்பதுடன் நிறுத்தி இருக்கலாம்.

 

முதன்மைக் கல்வி அலுவலருக்கு யாரிடம் இருந்து வந்த அழுத்தமோ? 

 

 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.