Skip to main content

ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்த சபரீசன்!

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Sabareesan in erode by election

 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் களம் அனலாய் மாறியுள்ளது.

 

தி.மு.க. அணியில் வாக்கு கேட்க செல்ல ஒரு வீதிக்கு 200 பேர் என்ற அளவில் ஒரு வார்டுக்கு ஏறக்குறைய 1000 பேர், ஒருவருக்கு 500 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. திரும்பத் திரும்ப ஒருவரையே வைத்துக்கொள்ளாமல் சுழற்சி முறையில் அதே வார்டிலுள்ள மற்றவர்களையும் தி.மு.க. அணி பயன்படுத்திவருகிறது. இதே பார்முலாவை கடைப்பிடித்துள்ள அ.தி.மு.க. ரூபாய் 500-க்கு பதிலாக 700 ரூபாய் வழங்கிவருகிறது. இதோடு சிக்கன் பிரியாணியும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர் சப்ளையும் நடக்கிறது.

 

இதனால் அ.தி.மு.க. தரப்பு சற்று உற்சாகத்தோடு வீதிகளில் வருகிறது. தி.மு.க. அணியில் சில பகுதிகளில் பணம் மட்டும்தான் தருகிறார்கள். டீ, காபி, சாப்பாடு தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வருகிறது. 

 

அ.தி.மு.க. வலுவாகக் காணப்படும் வீரப்பன்சத்திரம் பகுதிதான் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீதிகள்கொண்ட அந்த பகுதியில் முழுக்க விசைத்தறி தினசரி கூலித் தொழிலாளர்கள் அதிகம். இங்கு காலை ஆறு மணி முதலே வாக்கு கேட்கச் சென்றுவிடுகிறார் செந்தில்பாலாஜி. ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள பெண்களுக்கு புதிய புடவைகள், பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கப்படுகிறது. ஏறக்குறைய 20 ஆயிரம் வாக்குகள் கொண்ட அந்த பகுதியை முழுக்க கவர்செய்ய அமைச்சர்கள் தொடர்ந்து வேகம்காட்டுகிறார்கள்.

 

அ.தி.மு.க. தரப்பில் முதலில் பத்து மாஜிக்கள் தலா ரூ10 கோடி என 100 கோடியும் எடப்பாடி தனியாக நூறு கோடி என 200 கோடி ரூபாய் த.மா.க. இளைஞரணித் தலைவர் யுவராஜின் வில்லரசம்பட்டியிலுள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் வைக்கப்பட்டு அங்கிருந்து பண விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது. 200 கோடி போதாது என்ற தகவல் எடப்பாடிக்கு எட்ட 12-ஆம் தேதி மாலை ஈரோடு வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை நூறு கோடி செலவானாலும் பரவாயில்லை. நாம் இங்கு ஏற்கனவே வாங்கிய வாக்குகள் 56 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறவேண்டும். வெற்றி தோல்வியைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை என அ.தி.மு.க. மாஜிக்களிடம் கூறியிருக்கிறார்.

 

தொடர்ந்து ஐந்து நாட்கள் பிரச்சாரத்தில் பா.ஜ.க. அண்ணாமலையோடு சேர்ந்து ஒரு இடத்திலும் நான் பிரச்சாரம் செய்யமாட்டேன் என எடப்பாடி அறிவித்திருக்கிறார். அண்ணாமலையோடு ஓ.பி.எஸ். அணி பிரச்சாரம் செய்வதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்தத் தொகுதியிலுள்ள 238 வாக்குச்சாவடிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்டவை பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் இவற்றில் மத்திய போலீஸ் படையின் கவனம் அழுந்தப்பதிந்துள்ளது.

 

குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவருக்கும், டார்ச் லைட் சின்னம் வேலுமணி என்பவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இருவரும் தங்களுக்கு எப்படியும் 10 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் விழும் என எதிர்பார்க்கிறார்கள். தே.மு.தி.க. பிரச்சாரத்திற்கு பிரேமலதாவும், விஜயகாந்தின் மகனும் இறங்குகிறார்கள். அதேபோல் நாம் தமிழர் சீமான் தொடர்ந்து ஒரு வாரம் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

 

தி.மு.க. கூட்டணிக்கு வலிமைசேர்க்கும் விதமாக மூன்று நாட்கள் நடிகர் கமலஹாசன் பிரச்சாரத்தில் இறங்குகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, முதல்வர் மு.க. ஸ்டாலின் என ஈரோட்டின் அரசியல் மேடை தமிழகத்தின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது.

 

Sabareesan in erode by election

 

இந்த வரிசையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நேரடியாகக் களமிறங்கி இருக்கிறார். கடந்த பிப்ரவரி 9, 10 இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்ட அவர், 20-க்கும் மேற்பட்ட அமைப்பினரை அழைத்து அவர்களின் தேவைகளை, அரசு செய்யவேண்டியதைக் கேட்டறிந்து நிச்சயமாக அதை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். சபரீசனின் இரண்டு நாள் பயணம் தி.மு.க. அணிக்கு மேலும் பலம்சேர்த்திருக்கிறது.

 

ஈரோடு கிழக்குக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்காக பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர் வைத்தனர். அன்று மாலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என நான்காவது ஆக ப்ளக்சை மாற்றினார்கள். இந்த நான்கு பேனர்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம்பெற்றிருந்தன.

 

இந்த நிலையில் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் மாற்றிவைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சியின் வெற்றி வேட்பாளர் என பிரதமர் மோடியின் பெரிய படமும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சிறிய படமும் இணைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்துவிட்டு, ஆறாவதாக என்ன மாற்றம் செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை என ர.ர.க்களே கிண்டல் செய்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.