Skip to main content

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Yediyurappa

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நரசிம்மமூர்த்தி என்பவர், சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு, இந்த ஜனவரி 27, 2021 -இல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ளது கர்நாடக சிறைத்துறை நிர்வாகம். மேலும், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022 -இல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் பலரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதத்தை சசிகலா எழுதியிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஜனவரி 27 என தேதி குறிக்கப்பட்டிருப்பது குறித்து, சிறைத்துறை விதிகளில் மிகுந்த அனுபவமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நாம் பேசியபோது, "சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்காண்டு காலம் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்ட தவறினால், மேலும் ஒரு வருட காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே தீர்ப்பு.

 

இதனடிப்படையில், சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளின் போதே வழங்கப் பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, அவரது விடுதலைக்கான தேதியும் தீர்மானிக்கப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்கப்படும் போது, அந்தக் கோப்புகளில் இருக்கும் தேதியைத்தான் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கும். அப்படிப்பட்ட தகவல்தான் தற்போது வந்திருக்கிறது.

 

அதேசமயம், சிறை விதிகளின்படி தண்டனைக் காலங்களில் சசிகலாவுக்கு சலுகை நாட்கள் கிடைத்திருக்குமானால், அதனைத் தேவைப்படுகிற போதுதான் பரிசீலிப்பார்கள். அப்படிப் பரிசீலிக்கும்போது சலுகைகளாக எத்தனை நாட்கள் கிடைக்கிறதோ, அந்த நாட்களை மொத்த தண்டனைக் காலத்திலிருந்து கழித்த பிறகே விடுதலை தேதியை முடிவு செய்வர். அந்த வகையில், முன் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவரது விடுதலையில் அரசியல் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியாது?'' என்கிறார் அழுத்தமாக.

 

Ad

 

சசிகலாவின் விடுதலை தேதி குறித்த பரபரப்பு ஆளும்கட்சி அமைச்சர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்ததும் இதுகுறித்து, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, இந்தத் தேதியை வைத்துக்கொண்டு சசிகலா முன் விடுதலை ஆக மாட்டார் என்கிற முடிவுக்கு வராதீர்கள். கர்நாடக அரசு நினைத்தால் முன் விடுதலைக்கு அனுமதிக்கவும் செய்யலாம்'' என்று எடப்பாடியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வின் மேலிட தொடர்புகள் கூறுகின்றன.

 

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, "பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையின் சூப்பிரன்டெண்ட் வழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் எடியூரப்பாவுக்கும், கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. அதில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம், பரப்பன அக்ர ஹாரா சிறைக்குள் அடைக்கப்பட்ட தேதி, பரோலில் வெளியே சென்ற நாட்கள் ஆகிய அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு, கர்நாடக அரசின் சிறைத் துறை விதிகளின்படி, சிறையில் நேர்மையாக இருந்து வருகிறேன் என்பதையும், விதிகளுக்கு உட்பட்டு கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதையும், அந்த வகையில் ஒரு கைதிக்கு கர்நாடக அரசு வழங்கும் சலுகை நாட்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும் என்பதையும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.

 

அதனடிப்படையில், எனக்கான சலுகை நாட்களை கணக்கிட்டு அதனை எனது தண்டனை காலத்திலிருந்து கழித்து எனது விடுதலை தேதியை முடிவு செய்யுமாறு பணிந்து சமர்பிக்கிறேன் எனவும் சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார்' என்கிறார்கள் மத்திய உளவுத் துறையினர்.

 

Nakkheeran

 

இந்த நிலையில், சசிகலா ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து சில நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களும், சசிகலா இரண்டு முறை தமிழகத்திற்கு பரோலில் வந்த வகையில் 17 நாட்களும் என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சசிகலாவுக்கு அதிகபட்சம் 130 நாட்கள் சலுகை நாட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நன்னடத்தை விதிகளுக்காக வழங்கப்படும் இந்தச் சலுகை நாட்களை ஒரு கைதி தனது உரிமையாகக் கோர முடியாது. அரசாங்கத்தின் கண் அசைவினிலேயே சலுகை நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சசிகலாவின் விடுதலையில் அரசியல் விளையாட்டுகள் இருப்பதால் கர்நாடக அரசு மனது வைத்தால் மட்டுமே அவரது முன் விடுதலை தீர்மானிக்கப்படும்’ என்கிறார்கள் சிறைத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.

 

 


 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.