Skip to main content

கேள்விநேரம் ஸ்வாஹா! கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
dddd

 

 

இந்தியாவில் கரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

மாஸ்க் அணிதல், ஒரு இருக்கை விட்டுவிட்டு உறுப்பினர்களை அமரவைத்தல், கண்ணாடித் தடுப்பு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டத் தொடரில் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல எம்.பி.க்களின் வருகையும் பிரத்யேக ஆப் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, நீட் விவகாரம், கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டன.

 

நீட் அட்டாக்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையால் 12 மாணவர்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் எனப் பேசினார். திருச்சி சிவாவோ, பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு மட்டும் எப்படி நடத்த முடியும். பணம்கொடுத்து படிப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

 

கேள்விநேரம் ஸ்வாஹா

கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, மக்களின் பிரச்சனைகளை எழுப்புவதற்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு கேள்வி நேரம். அதனை ரத்துசெய்வதன் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க அரசு முயற்சிக்கிறது என்றார். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து கேள்வி நேரம் ரத்துசெய்யப்படவில்லையெனவும், கேள்விகளை எழுதி தந்தால் பொருத்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பிரகலாத் விளக்கமளித்தார்.

 

எல்லையைக் கோட்டைவிடும் இந்தியா

பல மாதங்களாக இந்திய எல்லைப்பகுதி பத்திரமாக இருக்கிறது எனக் கூறிவந்தது பா.ஜ.க. மாறாக, எல்லையில் சீனா படையைக் குவித்துவருவதாகவும், ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாதெனவும் மக்களவையிலேயே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். 1100 கிலோமீட்டர் ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தவேண்டுமென எதிர்க்கட்சிகள் கூற, பா.ஜ. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் நீங்கள் பேசலாம் எனக் கூறினார்..

 

செத்துப் போனாங்களா...

கரோனா குறித்த புள்ளி விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை கிட்டத்தட்ட 36 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 77.65 சதவிகிதமாகும். அரசின் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக 38,000 பேர் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் கரோனா சாதனைகளைத் தெரிவித்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு அரசு என்னென்ன உதவிகளை வழங்கியதென கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், "ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை. எனவே நிவாரணம் குறித்த கேள்விக்கு இடமில்லை'' என பதிலளித்தார்.

 

யார் நலனுக்காக மசோதா?

சந்தைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் மாநில அரசுகளைச் கலந்தாலோசிக்காமல், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவசரமாக மூன்று மசோதாக்களை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின. விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் குறித்த இந்த அவசர சட்டத்திருத்தங்களுக்கு இடதுசாரி, காங்கிரஸ், திரிணமுல் காங்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளின் பேரைச் சொல்லி பெருநிறுவனங்கள் பலனடையவே அவசரச் சட்டங்களை ஆளுங்கட்சி கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

 

கடன் நல்லது

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்சிங் தாக்குர், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை. மாநிலங்கள் கடன் வாங்கிச் சமாளிக்கும்படி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டத்துக்கெதிராக விமர்சனம் வைக்கும்போது, நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக்கூறி திரிணமுல் காங்கிரஸின் சௌகதாராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற அலுவல் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

 

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு செக்

கரோனா சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் நிதிநெருக்கடியைச் சமாளிக்க எம்.பி.க்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்ததுடன், இரண்டாண்டுகளுக்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மத்திய அரசு கைவத்துள்ளது.

 

மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே சரமாரியாக விமர்சனங்களை வைக்கும் எதிர்க்கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அவசர சட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம்காட்டுகிறது பா.ஜ.க.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.