Skip to main content

"நல்லா இருந்த கட்சியை ரவுடி பசங்க கட்சியா மாத்தி வச்சிருக்காங்க; சொந்தக் கட்சிக்குச் சூனியம் வைக்கிறார் அண்ணாமலை..." - ராம.சுப்பிரமணியன் பேச்சு

Published on 03/12/2022 | Edited on 05/12/2022

 

k

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இன்றைக்கு பாஜகவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. உழைத்தவர்களுக்கு மரியாதை என்பது சிறிதளவு கூட கிடைப்பதில்லை. இவர்கள் போனால் போகட்டும், நானே போனால் போவேன் என்பதெல்லாம் ஒரு கட்சித் தலைவர் பேசும் பேச்சல்ல.

 

முதலில் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வாயில் வருவது போவதை எல்லாம் பேசக்கூடாது. நாம் பேசுவதை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் அவர் உணர வேண்டும். சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கும்  வேலைகளைத்தான் தற்போது அண்ணாமலை செய்து வருகிறார். இந்த மாதிரியான போக்குகளை முதலில் அண்ணாமலை மாற்ற வேண்டும். தான் மட்டுமே கட்சி என்ற அமைப்பு பாஜகவில் மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இருக்காது. மூத்தோர்கள் செய்த தியாகமும், உழைப்புமே இன்றைக்கு பாஜக என்ற இயக்கம் இந்த அளவுக்கு வளருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. 

 

ஆர்எஸ்எஸ் பாஜக ஆகிய இரண்டு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே என்னப்பா கட்சி இப்படி போயிட்டு இருக்கு என்று என்னிடம் வருத்தத்தோடே பேசி வருகிறார்கள், நான் உங்கள் கட்சியா என்னிடம் கூறி என்னப்பா ஆகப்போகிறது என்று கூறினேன். படிப்படியா வளர்ந்த கட்சி பாஜக, இன்றைக்கு அதன் போக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? ரவுடிப் பயல்கள், குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கின்ற கட்சியாக மாற்றி வைத்துள்ளார்கள். கட்சியில் யாரைச் சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். 

 

வாய்க்கு வந்ததை மட்டும் பேசிவிட்டால் ஒரு மாநிலத்தலைவர் கட்சியை நல்ல முறையில் வழி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை. பாஜக பேரைக் கெடுத்தது மட்டும் இல்லாமல் தற்போது ஆர்எஸ்எஸ் பெயரே கெட்டுப்போகும் அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்து வருகிறது. பலரும் என்னிடம் இதுதொடர்பாக தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள். தான் பேசுவதே செய்தி என்று எந்த கட்சித் தலைவரும் நினைக்கமாட்டார்கள், ஆனால் தற்போது தமிழக பாஜகவில் அப்படியான சூழ்நிலை நிலவி வருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல. கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு பாஜக வந்துள்ளது. அதனைத் தவிடுபொடியாக்கி விட அண்ணாமலை முயற்சிக்க கூடாது" என்றார்.

 

 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.