Skip to main content

பிரசாந்த் கிஷோர் பட்டியலில் நமக்கு ஒரு தொகுதி கூட இல்லையா? அதிர்ச்சியில் திமுக மகளிர் அணி!!!

Published on 05/11/2020 | Edited on 06/11/2020
ddd

 

ஜெ. இருந்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.க.தான் முந்திக்கொள்ளும். ஆனால், இந்த முறை தி.மு.க. தரப்போ தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பொதுக் கூட்டங்கள் அறிவித்தல், மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு என டாப் கியரில் வேகமெடுத்துள்ளது.

 

மாவட்டவாரியாக முப்பெரும் விழா கூட்டங்களை இணைய வழியாக நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமை, "தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் நவம்பர் 1, 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் முறையே ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களை நடத்துகிறது.

 

அதேபோல, தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவும் அதிருப்திகளை களைந்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒன்றிணைந்து தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவும், தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தரும் அசைன்மெண்ட்டுகளை செயல்படுத்தவும் தமிழகத்தை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலமாக பிரித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்காக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 21-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் நடந்த கொங்கு மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணியை தி.மு.க.வின் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.

 

கொங்கு மண்டலத்தில் உயர பறக்கும் அ.தி.மு.க. செல்வாக்கையும் அ.தி.மு.க.வின் கொங்கு வேளாள கவுண்டர் அமைச்சர்களின் சாதி அரசியலையும் உடைக்கவே மேற்கு மண்டலத்திற்கு பொறுப்பாளர் நியமனம் நடந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வைவிட 3 சதவீத சரிவை தி.மு.க. சந்திப்பதாக ஏற்கனவே ஒரு ரிப்போர்ட்டை தந்துள்ளது ஐ-பேக் நிறுவனம். அந்த சரிவை சசி செய்ய ஐ-பேக் தரும் யுக்திகளை மேற்கு மண்டலத்தில் அமல்படுத்தும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்.

 

அதேபோல, தென் மண்டல பொறுப்பாளராக ஏ.வ.வேலு, கிழக்கு மண்டல பொறுப்பாளராக சண்முகம், வடக்கு மண்டல பொறுப்பாளராக ஆ.ராசா ஆகியோர் நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். மாவட்ட செயலாளர் பதவிகளில் தலித் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள அதிருப்திகளை சரி செய்யவும் ஆ.ராசாவுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த 4 மண்டலங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பொறுப்பாளராக கே.என்.நேருவை நியமிக்கவும் தீர்மானித்துள்ளார் ஸ்டாலின். வீக்கான ஏரியாக்களை கண்டறிந்து வேகம் காட்டி வருகிறார்கள் மண்டல பொறுப்பாளர்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.

 

இதற்கிடையே, தொகுதிக்கு 3 பேர் என்கிற கடைசிக்கட்ட வேட்பாளர் பட்டியலை நவம்பர் 15-க்குள் இறுதி செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரசாந்த் கிஷோருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே தொகுதிக்கு 5 பேர் எனத் தயாரித்த பட்டியலை பிரசாந்த் கிஷோர் கடந்தவாரம் மீண்டும் ஆய்வு செய்திருப்பதாகவும், நவம்பர் 15-ந்தேதி அந்த இறுதி பட்டியல் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க.வின் மேல்மட்ட தொடர்புகளிடம் எதிரொலிக்கிறது.

 

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஐ-பேக் தரும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படியே தேர்வு செய்தால், அது மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. குறிப்பாக, தி.மு.க. மகளிர் அணியினரிடம் கொந்தளிப்பு உருவாகும். அதாவது, வேட்பாளர்கள் குறித்து இதுவரை பிரசாந்த் கிஷோர் கொடுத்த 2 பட்டியல்களிலும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் தரப்படவே இல்லை.

 

சுருக்கமாக சொல்வதானால், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்காக ஒரு தொகுதியைக்கூட தேர்வு செய்யவில்லை. தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு வாய்ப்பில்லை என்பது துரதிர்ஷ்டமானது. நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக வலிமையான போராட்டங்களை நடத்தியிருப்பதுடன் தேசிய அளவில் குரல் கொடுத்தும் வருகிறது தி.மு.க..

 

அப்படியிருக்கும் சூழலில், தி.மு.க. மகளிர் அணியினருக்கான வாய்ப்புகள் தேர்தலில் மறுக்கப்பட்டால் கட்சிக்குள் அதிருப்திகளை வெடிக்கச் செய்யும். அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சீனியர்கள் பலரை தவிர்த்து புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க ஐ-பேக் தயாராக இல்லை. அதேசமயம், தி.மு.க.வின் கிச்சன் கேபினெட்டின் ஆதரவைப் பெற்ற சிலரின் பெயர்களை மட்டும் பரிசீலித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். மொத்தத்தில் ஐ-பேக்கின் இறுதி பட்டியலால் சில பூகம்பங்கள் வெடிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத வாய்ப்புகளை தராவிட்டாலும் குறைந்தபட்சம் 20 சதவீத இடங்களையாவது ஒதுக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க. மகளிர் அணியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐ-பேக்கின் வேட்பாளர் பட்டியல் தி.மு.கழகத்தில் கலகத்தை உருவாக்க காத்திருக்கிறது.

 


 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.