Skip to main content

“விருப்ப மனு கேட்டால் அடிப்பார்களா... நான் அதிமுகவில் சேர்ந்தபோது இவர்கள் அரசியலுக்கே வரவில்லை“ - ஓம்பொடி பிரசாத் சிங் தாக்கு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

sd

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அதிமுக தலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான வேட்புமனு விநியோகம் அதிமுக தலைமைக்கழகத்தில் செய்யப்பட்ட நிலையில், அதைப் பெறுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஓம்பொடி பிரசாத் சிங் சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது அவரிடம் அங்கிருந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து வெளியே அனுப்பினார்கள். வெளியே வந்த அவரை அங்கிருந்த சிலர் கடுமையாக தாக்கி கட்சி அலுவலகத்துக்கு வெளியே தள்ளினார்கள். இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "சம்பவம் நடைபெற்ற அந்த நாளில் நான் விருப்பமனு பெறுவதற்கான தலைமைக் கழகம் சென்றேன். என்னுடன் என் இரண்டு மகன்கள் கூட வந்திருந்தார்கள். ஏனென்றால் விருப்பமனு பெற்று அங்கேயே ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்களையும் அழைத்துச் சென்றேன். அதற்காக பேங்க்கில் இருந்து பணம் கூட எடுத்து வந்திருந்தோம். தலைமைக்கழகத்தில் என் பசங்களைக் கீழே நிற்க வைத்துவிட்டு நான் என்னுடைய லாயரோடு மாடிக்குச் செல்கிறேன். 

 

அங்கே மகாலிங்கம் சேரில் அமர்ந்திருந்தார். மனோகர் நின்றுகொண்டிருந்தார். நான் மகாலிங்கத்திடம், ‘ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், எனக்கு விருப்ப மனு தர வேண்டும்’ என்று கேட்டேன். உடனே அவர் சேரிலிருந்து பின்பக்கம் சென்று, கையை மேலும் கீழும் ஆட்டி, ‘உனக்கெல்லாம் தர முடியாது’ என்றார். நான் ‘ஏன் அப்படி சொல்கிறீர்கள், நான் தினமும் தலைமைக்கழகம் வருகிறவன், நீங்கள் என்னவோ முன்பின் தெரியாத ஆள் போல பேசுகிறீர்களே’ என்றேன். ஆனால் நான் சொல்வதை எதையும் அவர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை. வேட்புமனுவை முன்மொழிய ஆள் வேண்டுமே என்றார்கள். நான் கீழே என்னுடைய பசங்க இருக்கிறார்கள் என்றேன். அவர்கள் அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ளார்களா என்று கேட்டார்கள். நான் பாக்கெட்டில் இருந்த அவர்கள் இருவரின் உறுப்பினர் அட்டையையும் காட்டினேன். ஆனால் அவர்கள் விருப்பமனு தர ஒத்துக்கொள்ளவில்லை. என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். வெளியே வந்த என்னிடம் பத்திரிக்கையாளர்கள், ‘என்ன நடந்தது’ என்று கேட்டார்கள். நான் நடந்ததை எல்லாம் கூறினேன். இந்தக் கட்சி அலுவலகத்துக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள்.

 

எம்ஜிஆர் மாளிகை என்றால் என்ன சார், மொட்டையா இருக்குல்ல சார். பாரத ரத்னா புரட்சித் தலைவர் மாளிகை என்று வைத்திருக்க வேண்டாமா சார், இதுதான் தலைவரைப் பெருமைப்படுத்தும் முறையா? பிரதமர் மோடி இலங்கைக்குச் சென்று தலைவரைப் பற்றி பேசியிருக்கிறார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைத்துள்ளார்கள். ஆனால் அவர் வாழ்ந்த கட்சி தலைமையத்துக்கு அவரின் பெயரை முழுமையாக வைக்கவில்லை. இதை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். நிச்சயம் இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கட்டடத்தை யார் கொடுத்தது, ஜானகி அம்மாள். ஆனால் ஒரு ஸ்டாம்ப் சைஸ்க்கு அவருடைய புகைப்படம் தலைமைக்கழகத்தில் எங்கேயாவது இருக்கிறதா என்றால், எங்கேயும் இல்லை. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஜானகி அம்மாள் புகைப்படத்தை தலைமைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று, ஆனால் அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இதனால் நானே தலைமைக்கழகத்தில் எங்கே பெயர்வைக்க வேண்டும், அது எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தயாரித்து தலைமைக்கழகத்துக்கு அனுப்பினேன், கட்சியின் முக்கியமானவர்கள் அனைவருக்கும் அனுப்பினேன். ஆனால் அதுகுறித்து ஒருவரும் அக்கறை காட்டவில்லை. 

 

அவர்கள் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, என்னிடம் 5 லட்சம் பணம் கொடுத்தால் நானே அருமையாக செய்துவிடுவேன். சரியில்லை என்றால் 10 லட்சம் நானே தலைமைக்கழகத்துக்கு தருகிறேன். இதற்கு அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இதைக்கூட செய்ய தயாராக இல்லாத அவர்கள் கட்சியை எப்படி வளர்ப்பார்கள் என்று நம்புவது. 250க்கும் மேற்பட்டவர்கள் இவர்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கூறுகிறார்கள். இவர்கள் மட்டும்தான் அதிமுகவா? கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை அதிமுகவினர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தலைமை பதவிக்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. முதலில் இந்த தேர்தல் செல்லுமா என்றால் நிச்சயம் செல்லாது. அவசர கதியில் நடத்தப்பட்டு அவர்களையும், தொண்டர்களையும் இவர்கள் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள். எனவே இவர்கள் நிச்சயம் அதற்கான பலன்களை அடைவார்கள். இந்தக் கட்சி அவர்களின் தலைமையில் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் என்னைப் போன்றவர்களின் மனதில் ஆறாத வடுவாய் இருக்கிறது" என்றார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.