Skip to main content

மோடி என்றொரு அனில் அம்பானியின் சேவகன்!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
modi


2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிமுகப்படுத்துவதற்காக, அவரைச் சுற்றிலும் கட்டி எழுப்பப்பட்ட மாயப் பிம்பங்களை கணக்கிடவே முடியாது.
 

அவருடைய தோற்றத்திலிருந்து, குஜராத் முதல்வராக அவருடைய செயல்பாடுகள் வரை பார்த்துப்பார்த்து அந்த பிம்பங்களை உருவாக்கினார்கள். இந்திய தேர்தல்களில் முதல்முறையாக சமூகவலைத்தளங்களில் மோடியைப் பற்றிய பொய்ப் பிம்பங்களை உண்மையைப் போல பரப்பினார்கள். இத்தகைய பிரச்சாரத்துக்கு தயாராகாத காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அந்தப் பொய்களை அம்பலப்படுத்த தவறிவிட்டன.
 

உலகின் மிகச்சிறந்த கட்டுமானங்கள் அனைத்தையும் குஜராத்தில் முதல்வர் மோடி உருவாக்கியதாக இணையத்தில் உலவவிட்டனர். அதைப்பார்த்து மயங்க புதிய வாக்காளர்கள் இருந்தனர். அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலமான அணியை அமைப்பதில் தவறிவிட்டன. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குரிய சீட்டுகளில் பிடிவாதம் பிடித்து, பாஜகவுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டன.
 

69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், வெறும் 31 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
 

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தனக்கு பிரதமராக வாய்ப்பை உருவாக்கிய கார்பரேட்டுகளின் நலனுக்காக நாடு நாடாக பறந்துபறந்து உழைத்தார் மோடி.
 

இந்திய மக்களின் வரிப்பணத்தை 4 ஆயிரம் கோடிக்குமேல் செலவழித்து உலகம் சுற்றிய மோடி, அந்தப் பயணங்களால் இந்தியாவுக்காக ஈட்டிய லாபம் ஒன்றுமில்லை. அப்படி ஒன்றை ஈட்டியதாக இன்றுவரை அவரும் சரி, அவருடைய அரசும் சரி சொல்லவே இல்லை.
 

அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதானிக்கும், அனில் அம்பானிக்கும், அமித் ஷாவுக்கும், நீரவ் மோடிக்கும் கிஃப்ட்டுகளை வாரிக்கொடுத்தார்.
 

அனில் அம்பானிக்கு மட்டும் மோடி அள்ளிக் கொடுத்த கிஃப்ட்டுகளைப் பட்டியல் போடலாம்…
 

2015 ஜூன் மாதம் வங்கதேசத்துடன் மின் திட்டத்திற்காக ரூ.6,500 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
 

2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ரஃபேல் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம்.
 

2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.3,647 கோடியில் தமிழ்நாடு அனல் மின்திட்ட ஒப்பந்தம்.
 

2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.1081 கோடியில் கூடங்குளம் அணு மின் திட்ட ஒப்பந்தம்.
 

2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.1584 கோடியில் மும்பை பெருநகர மெட்ரோ லைன்-4 திட்ட ஒப்பந்தம்.
 

2018 மே மாதம் ரூ.6994 கோடியில் வெர்ஸோவா-பந்த்ரா கடல்வழி தொடர்புப் பாலம் ஒப்பந்தம்.
 

2018 ஜூலையில் ரூ.15 ஆயிரம் கோடியில் போர்க்கப்பல்களை சீரமைக்க அமெரிக்க கடற்படையுடன் ஒப்பந்தம்.
 

2018 ஜூலையில் ரூ.21,002 கோடியில் இந்திய கடற்படைக்காக ரஷ்யாவுடன் போர்க்கப்பல் ஒப்பந்தம்.
 

2018 ஆகஸ்ட் மாதம் ரூ.1907 கோடியில் நாக்பூர் டூ மும்பை இ-வே பேக்கேஜ்-7 ஒப்பந்தம்.
 

2019 மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலைய ஒப்பந்தம்.
 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மோடியின் ஆட்சி முடியப்போகிறது என்று அறிந்த பிறகு, 2018 ஆம் ஆண்டில்தான் அனில் அம்பானிக்கு ஏகப்பட்ட அன்பளிப்புகளை வாரி வழங்கியிருக்கிறார் மோடி.

 

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.