Skip to main content

“அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி” - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Published on 17/06/2025 | Edited on 17/06/2025

 

 President Donald Trump announcement Iranian airspace under US control 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே சில மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அணு குண்டுகளை தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கும் வகையில் ஈரானோடு அணு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால், கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள் மூலமாகவும், ட்ரோன்கள் மூலமாகவும் ஈரான் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்தது.

இதற்கிடையில் ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித கட்டுப்பாடின்றி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் உறுதியாகக் கூறி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நடக்கும் தொடர் தாக்குதலில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதால், உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது ஈரான் மீதான வான்வெளியை  முழுமையாக கட்டுப்படுத்திவிட்டோம். ஈரானிடம் நல்ல வான்வளி (ஸ்கை) டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் இருந்தன. அவை ஏராளமாக இருந்தன. ஆனால் அது அமெரிக்காவில்  தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒப்பிடப்படவில்லை. அமெரிக்காவை விட வேறு யாரும் இதைச் சிறப்பாகச் செய்யவில்லை. உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கே ஒளிந்திருக்கிறார் நமக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு. ஆனால் அவர் அங்கே பாதுகாப்பாக இருக்கிறார். குறைந்தபட்சம் இப்போதைக்கு நாம் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!). ஆனால் நாங்கள் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. நிபந்தனையற்ற சர்ணடைதல்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்