Skip to main content

கொங்கு மண்டல தி.மு.க.வுக்கு முதல்வர் எடப்பாடி மீது பாசம்...? –குமுறும் உ.பி.க்கள்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் உற்சாகமடைந்த பகுதி என்றால் கொங்கு மண்டலம் தான். அதேபோல் திமுகவினர் உற்சாகம் இழந்த பகுதியும் இந்த கொங்கு மண்டலம்தான். காரணம் இங்கு நடைபெற்ற தேர்தலில் யூனியன் கவுன்சிலர்கள் முதல் மாவட்ட கவுன்சிலர்கள் வரை அதிமுகவினரே அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர். திமுக இங்கு பெரிய அளவில் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இதுபற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள சீனியர் திமுக உடன் பிறப்புகள் வேதனையோடு தெரிவிப்பது என்னவென்றால்,
 

"எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றுவரை கொங்கு மண்டலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்தனர். இது மறைந்த ஜெயலலிதா காலம் வரை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. திமுக இங்கு கொஞ்சம் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் கட்சி தலைமை பொறுப்புக்கு வந்து சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தல் சென்ற நாடாளுமன்ற தேர்தல். அதில் இந்தப் பகுதி முழுக்க திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிமுகவின் கோட்டையை திமுக சுக்கு நூறாக உடைத்தது என்பது உண்மைதான்.

 

eps


 

ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி என்பது எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அதிமுக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த பகுதியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பாசம் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது.
 

கட்சியின் வெற்றி மட்டுமே ஒரே நோக்கம் என்று உழைக்காமல், சாதாரணமாக இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர்களே தங்கள் வெற்றிக்காக உழைக்கட்டும் என ஒதுங்கி விட்டனர். இதனால்தான் இந்தப் பகுதியில் திமுக அதிகப்படியான தோல்வியை சந்தித்திருக்கிறது.


 

எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டல பகுதியை சேர்ந்தவர் என்பதோடு அவர் மீது ஒருவகையில் இங்குள்ள திமுகவினர் இணக்கமான அணுகு முறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.
 

எடப்பாடி பழனிச்சாமி மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கட்சி என்று வந்துவிட்டால் கட்சிக்காக தானே உழைக்க வேண்டும். குறிப்பாக இந்த மண்டலத்தில் உள்ள 8 மாவட்டத்தில் நீலகிரி மாவட்டம் மட்டும் தான் திமுகவின் கோட்டையாக இப்போதும் விளங்குகிறது. மற்ற கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி இந்த 7 மாவட்டமும்  திமுகவிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதற்கு காரணம் இங்கு கட்சியை நிர்வாகம் செய்யும் முன்னணி நிர்வாகிகள் இந்த தேர்தலில் எந்தவித உழைப்பையும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. மா.செ.க்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், வருகிற சட்டமன்ற தேர்தல் அதில் சீட் வாங்கி வெற்றி பெற்று தி.மு.க.ஆட்சியில் அமைச்சராக வேண்டும் அதுதான் அவர்களின் ஒரே இலக்காக உள்ளது.


 

இதில் ஒரு ஆறுதலான விஷயம் ஈரோடு தெற்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பாராட்டப்பட வேண்டியவர். அதற்கு  காரணம் இந்த தெற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவியில் மூன்று தி மு க வுக்கு வந்துள்ளது. அதேபோல் ஐந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 3 திமுகவுக்கு வந்துள்ளது. தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சொல்லும்படி எதுவுமே  இல்லை. அதே போல் தான் மற்ற பல மாவட்டங்களிலும் திமுக வெற்றி பெறாமல் நல்ல வாய்ப்பை இழந்துள்ளது. கட்சித் தலைமை இனிமேலாவது அ தி மு க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பாசம் வைத்துள்ள திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றனர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க.தோல்வியை ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மை நிலை தி.மு.க. தலைமைக்கு தெரிய வரும் என்றனர். 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.