
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல வெளிநாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தான், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள், அரசியல்கட்சிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (26-4-25) இரவு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கீரமங்கலம் நகரம், திருவரங்குளம் தெற்கு, கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. பஹல்காம் சம்பவ இடத்தின் படங்களுடன் பதாகை ஏந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.