Skip to main content

டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
P.r.pandian

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

 

அப்போது அவர், ''மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், உரிய அவகாசம் அளிக்காமல், அவசரம் அவசரமாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. 

 

குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, மத்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதை அனுமதிக்க மாட்டோம். பெரும் கார்ப்பரேட்டுகள் சந்தைகளில் அனுமதிப்படுவதை ஏற்க மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துதான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

 

பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிய அன்றைய தினமே பஞ்சாப்பில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. மத்திய அரசு அம்மாநில அரசையும், விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் கொள்கை முடிவு என்பதில் இடம்பெற செய்ய மாட்டோம், வாய்மொழி உத்தரவு தருவதாக சொன்னார்கள். அதனை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். இதனால்தான் போராட்டம் தீவிரமானது. 

 

ddd
டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் 

 

 

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. இப்போது போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சொல்வது, போராட்டத்தை திசை திருப்ப முயற்சிதானேயொழிய, விவசாயிகளக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. 

 

விவசாயிகள் தங்கள் அமைதி வழிப் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். விரைவில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பது முக்கியமில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம். 

 

விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கக்கூடிய அம்சங்களை திரும்பப்பெற்றோம் என்ற நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்தும் வடநாட்டு போராட்டக் குழுவோடு இணைந்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக போராடும் விவசாயிகள் மீது போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானம் அற்ற செயல். அதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை திருவாரூரில் எங்கள் சங்கத்தின் சார்பாக அடையாளப்பூர்வமான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து காவிரி டெல்டா உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆதரவு தரும் வகையில் போராட்டம் நடத்துவோம். வரும் 3ஆம் தேதி நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல தீர்வு வராத பட்சத்தில் நாங்களும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்'' என்றார் உறுதியாக.

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.