Skip to main content

உங்கள் ஓட்டு விலை ரூ.2000/- எடப்பாடியின் கரன்ஸி மேஜிக்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021
ddd

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று நம்புகிறது பா.ஜ.க. தலைமை. தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் அது கருதுகிறது.

 

அண்மையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு மருத்துவக் குழுவிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின்கட்கரி, இதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, குதிரைபேர விளையாட்டின் மூலம் தமிழக அரசியலில் பலமாக விளையாடலாம் என்று விறுவிறுப்பாய்க் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது டெல்லி.

 

அதேநேரம் எடப்பாடி மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் ஒரு பக்கம் சோழி உருட்டிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், க்ளைமாக்ஸ் நேரத்தில் டிப்ஸ் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதன்படி சராசரி 180 தொகுதி களுக்கு 3600 கோடி ரூபாயைச் செலவழிக்கவும் அவர் ரெடியாகிவிட்டார். அதேபோல் மேற்கொண்டு மற்ற செலவுகளைச் சமாளிக்கவும் தொகுதிக்கு மேலும் ஒரு 20 கோடி வீதம், இன்னொரு 3600 கோடியையும் அவர் ஒதுக்கியிருக்கிறாராம். இந்த வகையில் 7,200 கோடியைத் தேர்தல் களத்தில் வாரி இறைக்க முடிவுசெய்திருக்கிறது எடப்பாடித் தரப்பு.

ddd

ஜெ.’இருந்தபோது, ஒவ்வொரு அமைச்சரும், மா.செ.க்களும் மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை இப்போது இல்லை. அதேபோல் தேர்தல் காலச் செலவுகளுக்காக மாதம் தோறும் பார்ட்டி ஃபண்டையும் யாரும் தரவேண்டியதில்லை. அதனால் அமைச்சர்களிடம் அதிகமாகவே பணப் புழக்கம் இருந்துவருகிறது.

 

இந்த நிலையில் தேர்தலுக்குத் தன் பங்காக 5ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி இறைக்கவும் எடப்பாடி தயாராக இருக்கிறாராம். இந்தத் தகுதியைச் சுட்டிக்காட்டித்தான், அவர் முதல்வர் வேட்பாளர் என்ற நாற்காலியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே தேர்தல் செலவுகளை எல்லாம் எளிதாக ஊதித் தள்ளிவிடலாம் என்று அ.தி.மு.க. தரப்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கிறது.

 

அதேபோல் கூட்டணியில் இருக்கும் பவர் பார்ட்டியான பா.ஜ.க.வுக்கும், அது விரும்புகிற அளவுக்கு அள்ளித்தரவும் அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறதாம். இதற்கு முன் பா.ஜ.க. எந்த மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்தாலும், அவர்களது தேர்தல் செலவுகளுக்கும் தனது வள்ளல் கரத்தைத் தாராளமாகவே அ.தி.மு.க. நீட்டியிருக்கிறது. இந்தப் பணப் பரிவர்த்தனைகளை எடப்பாடியோடு சேர்ந்து கவனித்துக் கொண்டவர்கள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ’"சுகாதாரம்' விஜயபாஸ்கர் ஆகியோர்தான் என்கிறது டெல்லித் தரப்பு. வேட்பாளர் லிஸ்டிலும் இந்த மூவரின் பங்களிப்பு அதிகமாம்.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் இருந்தும் கூட, வேட்பாளர் தேர்வில் எடப்பாடி தன் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கடுப்பு ஓ.பி.எஸ்.சிடமும் இருக்கிறது. அவரது ஆதரவாளரான செம்மலைக்கே எடப்பாடி சீட் இல்லை என்று சொல்ல, இதைக்கேட்டு டென்ஷனாகிவிட்டாராம் ஓ.பி.எஸ். ""வேட்பாளர்களுக்கான பி ஃபார்மிலும் நான் கையெழுத்து இடமாட்டேன் என்பதையும் எடப்பாடியிடம் சொல்லிவிடுங்கள்''’என்று அவர் கோபமாகச் சொன்னதாகவும் தகவல். ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்த 9-ந் தேதி நள்ளிரவு வரை ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது.

ddd

இந்த நிலையில் தே.மு.தி.க. வெளியேறியதால், பா.ஜ.க.வும், த.மா.கா.வும், "அவர்களுக்கான சீட்டை எங்களுக்குக் கொடுங்கள்' என்று நச்சரிக்க ஆரம்பித்தது எடப்பாடிக்கு புதிய தலைவலியைக் கொடுக்க... அதையும் சமாளித்துள்ளார்.

 

இதற்கிடையே அ.ம.மு.க. 15 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை 10-ந் தேதி வெளியிட்டது. அதில் 90 சதம் பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மேலும் அவர்கள் அத்தனை பேரும் தொகுதியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால், அது அ.தி.மு.க.வின் களத்தைக் கொஞ்சம் சிக்கலாகி விடுமோ என்ற தயக்கம் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறதாம்

 

இந்தச் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவான அலை மெல்ல வீசுகிறது என்று சிலர், அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, ""அதையெல்லாம் எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியும். கரன்சி மேஜிக்கால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை'' என்று தன் நண்பர்களிடம் எடப்பாடி நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம்.


 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.