
மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியின் 91 வது பிறந்தநாள் விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா சென்னையில் நடைபெற உள்ளது.
திராவிட இயக்க முன்னோடியான குருசாமியின் எழுத்துகள் குத்தூசி போல் இருப்பதால், 'குத்தூசி குருசாமி என்று பெயர் பெற்றார். குத்தூசி குருசாமியை முன்மாதிரியாகக் கொண்டு கடுமையான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியதால் 'சின்னகுத்தூசி' என்று பெயர் பெற்றார் எழுத்தாளர் இரா.தியாகராஜன்.
எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகரான சின்னக்குத்தூசி நக்கீரன் பதிப்பகத்தின் மூலம் அவர் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக 'பூக்கூடை' என்ற புத்தகம் நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்படும் நிலையில் இந்த வருடம் சின்னக்குத்தூசியின் 91 வது பிறந்தநாள் விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற உள்ளது.
வரும் ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கில் நிகழ்வானது நடைபெற உள்ளது. நக்கீரன் ஆசிரியர் நன்றியுரை ஆற்ற, பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார். நிகழ்வில் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு, சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை செயலாளர் கௌரா ராஜகோபால், எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரை, சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் ராயப்பன், அருள் செல்வன் பங்கேற்க உள்ளனர். திராவிட இயக்க சிந்தனையாளர் திருச்சி செல்வேந்திரன் இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ளார்.