Skip to main content

எடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது!!! -எஸ்.எஸ்.சிவசங்கர்

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
ddd

 

 

அதிகாரப்பூர்வமாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "அடிமை அ.தி.மு.க அரசு, அடிமை அ.தி.மு.க அரசு", என ஓயாமல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி வந்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் வெகுண்டெழுந்து பதிலளித்து வந்தார்கள். நேற்று ஈ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு, அமித்ஷா காலில் வீழ்ந்து, உதயநிதி சொல்லை உண்மையாக்கி விட்டார்கள்.

 

சமீப காலம் வரை, "தேர்தல் வரை தான் கூட்டணி இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை" என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். பிறகு, "தேர்தல் வந்தால்தான் கூட்டணி முடிவாகும்", என வேறு சில அமைச்சர்கள் சொன்னார்கள். பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என காட்ட சில வித்தைகளை எல்லாம் காட்டினார்கள். 

 

அந்த வித்தையின் உச்சகட்டம் தான், அ.தி.மு.க அரசு 'அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன்' அமைத்தது என்று சொல்லலாம். சூரப்பா ஓர் ஆர்.எஸ்.எஸ் ஆள். அவரை நியமிக்க சொன்னது பா.ஜ.க தலைமை. நியமித்தவர் கவர்னர். அதனால் சூரப்பா மீதான நடவடிக்கையை தங்களுக்கு எதிரானதாக ஆர்.எஸ்.எஸ் கருத வாய்ப்பு. அதன் எதிரொலி தான் அமித்ஷாவின் பயணமும், அ.தி.மு.கவின் அறிவிப்பும்.

 

இதை எப்படி தொடர்பு படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். கேள்வி சரி தான், ஆனால் பதில் அது தான்.

 

'குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்பது போல, உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் ஆளுநரை சீண்டி, பா.ஜ.கவின் ரியாக்ஷன் என்ன என்று பார்த்தார்கள். ரியாக்ஷன் அமித்ஷா வடிவில் வந்து விட்டது.

 

பா.ஜ.க அமைதியாக இருந்திருந்தால், கூட்டணி இல்லை என்பதை நோக்கி முன்னேறி இருப்பார்கள். ஆனால் பா.ஜ.க அமைதி கலைத்து விட்டது.

 

இரண்டு கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கும் முன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும், அதற்கு பல தயாரிப்புகள் நடைபெறும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்த போது அரங்கேறிய காட்சிகளை நினைவு கூர்ந்தால், இந்த கூட்டணி அறிவிப்பின் 'உண்மை நிலை' புரியும்.

 

திடீரென "அமித்ஷா டூரை" அறிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். "அரசு நிகழ்ச்சி மட்டும்", என்றார். பிறகு, "கட்சி நிகழ்ச்சியும்", என்றார். 

 

அமித்ஷா கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியை அவசர, அவசரமாக திட்டமிட்டார்கள். தமிழக அரசின் விழா அது. தமிழக அரசின் எந்த துறை நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த அமைச்சர்களை அறிவிக்க விடாமல், தானே அறிவிப்பதும், தானே விழா நடத்துவதும் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம், வழக்கம்.

 

ஆனால் இந்த அரசு நிகழ்ச்சிக்கு அமித்ஷாவை சிறப்பு விருந்தினராக அழைத்தது அ.தி.மு.க. அதை தவிர வேறு வழியில்லை எடப்பாடிக்கு.

 

அதுவும் இது எடப்பாடி கையில் இருக்கும் துறையின் நிகழ்ச்சி. இதிலேயே அமித்ஷா சிறப்பு விருந்தினர் என்றால் இது பல செய்திகளை சொல்கிறது. இந்த நிகழ்வு எடப்பாடி கையில் இருந்து 'அதிகாரம்' அமித்ஷா கைக்கு மாறுவதை காட்டும் 'இண்டிகேட்டர்'.  ஜெயலலிதா உடலை வைத்துக் கொண்டு, அவசர அவசரமாக பதவியேற்றது போல் தான், இந்த அமித்ஷாவின் அவசர பயணமும்.

 

அமித்ஷா விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து தங்கும் அறைக்கு செல்லும் வரையும், அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு சென்ற வரையிலும் இருபுறமும் அ.தி.மு.கவினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது, "அமித்ஷா தான் அடுத்த தலைமை" என்பதை காட்டுகிறது.

 

ஜெயலலிதா, எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போலவே, அமித்ஷாவுக்கு அளிக்கப்பட்டது இதை வெளிப்படுத்துகிறது.

 

dddd

 

அரசு நிகழ்ச்சிக்கு முன், அமித்ஷாவை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் சந்திக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பிறகே சந்தித்தனர். அதனால், நிகழ்ச்சிக்கு முன்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பேச்சுவார்த்தை இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார்.

 

டெல்லியில் இருந்து வந்த கட்டளைப்படி, "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி"யை அறிவித்தார்கள் இவர்கள். அடிமைகள் அடிபணிந்ததை அமித்ஷா ஆனந்தமாக தலையசைத்து ஏற்றுக் கொண்டார். 

 

கூட்டணியை அறிவித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். சில நாட்களுக்கு முன் கவர்னர் டெல்லி சென்றது நினைவிருக்கும், அப்போது கவர்னர் கொடுத்த "சீக்ரெட் பைல்கள்" அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்கள், கொள்ளைகள், கோல்மால்களை பட்டியலிட்டன. அது குறித்த "எச்சரிக்கை தகவல்கள்" தான் எடப்பாடியை மீண்டும் "தெண்டனிட" வைத்தது. அவருக்கு அது பழக்கமானது தானே. ஏற்கனவே சசிகலா காலை நோக்கி தவழ்ந்து தான் முதல்வரானார். இப்போது அமித்ஷா காலில் வீழ்ந்து "ரெய்டுகளில்" இருந்து தப்பி உள்ளார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.