Skip to main content

சூதுவாது இல்லாத நல்ல பண்பாளர் நடிகர் பிரபு... நடிகர் ராஜேஷ் நினைவு கூறும் சிவாஜி கணேசன் வீட்டுத் திருமணம்!!!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

prabhu

 

நடிகர் ராஜேஷ் அவர்கள் கலை, இலக்கியம், தமிழர்களின் வாழ்வியல், பிரபலங்களின் அறியாத பக்கம், அவர்களுடனான தன்னுடைய நெருக்கம், ஜோதிடம் எனப் பல்வேறு தலைப்புகளில் நம்மோடு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரபு குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்ட சில விஷயங்களைப் பார்ப்போம்.

 

"2011 -ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், வீட்டில் ஒரு திருமண விழா நடந்தது. நான் குடும்பத்தினரோடு அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தனர். அவர்கள் கிளம்பும் போது ஜெயலலிதாவுக்கு வணக்கம் கூறினேன். அவர் அதைக் கவனிக்கவில்லை. நடிகர் பிரபு ஜெயலலிதா அவர்களை அழைத்து நான் வணக்கம் செய்ததைக் கூறினார். உடனே ஜெயலலிதா அவர்கள் என்னிடம் நலம் விசாரித்து, சீக்கிரம் ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். பிரபு இருந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இதைக் கவனித்துக் கூட இருக்க மாட்டார்கள். இது அவரிடம் நான் பார்த்து வியந்த குணம்.

 

திருச்சி சிவா அவர்கள் இல்லத் திருமணத்தில் நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நடிகர் வாகை சந்திரசேகர் நடிகர் பிரபுவை அழைத்து, ராஜேஷ் எப்படி இவ்வளவு இளமையாகவே இருக்கிறார் என்று கேட்டார். உடனே பிரபு அவர்கள், அவருக்கு நெஞ்சு சுத்தம் என்று பதிலளித்தார். எந்தவொரு சூதுவாதும் இல்லாமல் நல்ல குணங்களை உடைய ஒப்பற்ற மனிதர் நடிகர் பிரபு அவர்கள்...".