Skip to main content

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'ஜெய் பீம்'..? - விமர்சனம்

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

suriya starring jai bhim movie review

 

நடிகர் சூர்யா முதன்முறையாக வக்கீலாக நடித்துள்ள படம், அதுவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைக்களம், சூர்யாவின் ஓடிடி ஹிட் செண்டிமெண்ட், ஆர்வத்தைத் தூண்டிய அட்டகாசமான ட்ரைலர் என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா..? 

 

பழங்குடியினமான இருளர் இனத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீஸார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். இதை எதிர்த்து அவரது மனைவி லிஜோமோல் ஜோஸ் போராடுகிறார். இதற்கிடையே, காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் மேல் லிஜோமோல் ஜோஸ்க்கு சந்தேகம் வர, வக்கீல் சூர்யாவுடன் இணைந்து போலீசார் மீது வழக்கு தொடர்கிறார். வழக்கு உயர் நீதிமன்றம் வரை செல்கிறது. அங்கு நடக்கும் வழக்கு விசாரணையில் மணிகண்டன் மேல் போடப்பட்ட திருட்டு வழக்கு நிரூபிக்கப்பட்டதா, மணிகண்டன் நிலை என்னவானது? என்பதே படத்தின் மீதிக் கதை.

 

suriya starring jai bhim movie review

 

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான அடக்குமுறை மற்றும் அவர்களுக்கெதிரான அநியாயங்களைச் சமரசமின்றி அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் டி.ஜெ. ஞானவேல். தங்களை மேலானவர்களாக அறிவித்துக்கொண்டுள்ள சமூகத்தின் சில குறிப்பிட்ட சாரார், பழங்குடியின மக்களை எப்படி அணுகுகிறார்கள், அதேபோல் தங்களுடைய குற்றச்செயல்களை மறைக்க எப்படி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்துகின்றனர் என்பதை விரிவாகவும், அழுத்தமாகவும் அதேசமயம் விறுவிறுப்பான திரைக்கதையுடனும் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியுள்ளது 'ஜெய் பீம்' திரைப்படம். 

 

பொதுவாக படம் வெற்றிபெற வேண்டுமானால் அதில் கமர்ஷியல் அம்சங்களைப் படக்குழு சேர்ப்பதுண்டு. ஆனால், இந்தப் படத்தில் அவ்வாறான கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றாலும், அதையெல்லாம் தாண்டி அழுத்தமான கதையாடலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், ஆழமான வசனங்களும் அயர்ச்சி ஏற்படாதவாறு அமைந்து படத்தை வெற்றிகரமாகக் கரைசேர்த்துள்ளது. மிகவும் ராவான ஒரு கதையைத் திறம்படக் கையாண்டு, சிறப்பாகத் திரைக்கதை அமைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் டி.ஜெ. ஞானவேல்.

 

நாயகனாக வரும் நடிகர் மணிகண்டன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இருளர் இன வழக்காடல்களைச் சிறப்பாகக் கையாண்டு, அதற்கேற்ப நடித்து கவனம் பெற்றுள்ளார். இவரது அப்பாவியான நடிப்பும், கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் பார்ப்பவர்கள் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இயக்குநரின் நடிகராகவே மாறியுள்ளார் மணிகண்டன். நாயகி லிஜோமோல் ஜோஸ் கேரளத்துப் பெண்மணியாக இருந்தாலும் சொந்தக் குரலில் அழகாக இருளர் மக்களின் மொழி வழக்கை அச்சு பிசகாமல் பேசி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவனை இழந்து வாடும் கர்ப்பிணிப் பெண்ணின் துல்லியமான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி அனுதாபம் கூட்டியுள்ளார்.

 

படத்தின் இன்னொரு நாயகனான நடிகர் சூர்யா எப்போதும்போல் தனது தரமான நடிப்பில் மிளிர்ந்துள்ளார். முதல்முறையாக வக்கீலாக நடித்திருக்கும் இவர், அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்துள்ளார். காவல்துறையினரால் மலைவாழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடும் இவரது கதாபாத்திரம் படத்துக்கு ஆணிவேராக அமைந்து வேகம் கூட்டுகிறது. போலீசாக நடித்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றுள்ளார். சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் மனதில் பதிகிறது. சிறிய வேடத்தில் வரும் நடிகை ரஜிஷா விஜயன் தனக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். இவரது நம்பிக்கை அளிக்கும்படியான கதாபாத்திரம் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

 

suriya starring jai bhim movie review

 

எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்குத் தூணாக இருந்து பலமளிக்கிறது. அதேபோல் பாடல்களும் படத்தின் தன்மையையும், உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.

 

1995இல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படம், மலைவாழ் அப்பாவி மக்கள் மீது அதிகாரம் படைத்தவர்கள் மேற்கொண்ட வன்கொடுமைகளைச் சமரசமில்லாமல் விறுவிறுப்பாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. 

 

'ஜெய் பீம்' - சாட்டையடி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.