Skip to main content

பாலியல் வழக்கு; நடிகையிடம் ரூ.1 கோடி பேரம் பேசும் பிரபல நடிகர்!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Vijaybabu has negotiated give rs 1crores  actress if case withdrawn

 

மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார் விஜய் பாபு. இவர் மீது கோழிக்கோட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் பாபு தன் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையின் பெயரை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் வெளியிட்டதால் விஜய் பாபுவின் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நடிகர் விஜய் பாபு துபாய்க்கு தப்பித்து சென்ற நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி  போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான விஜய் பாபு, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை, இருவரும் சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம். என் படத்தில் அந்த நடிகைக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால் என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்று தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதையடுத்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறைக்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் விஜய்பாபு வழக்கை வாபஸ் வாங்கினால் ரூ. 1 கோடி தருகிறேன் என்று பேரம் பேசுவதாகச் சம்பந்தப்பட்ட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் என்ன நடந்தாலும் இந்த வழக்கை நான் வாபஸ் வாங்க மாட்டேன் எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


சார்ந்த செய்திகள்