Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Senthil Balaji Case The court ordered the ed to take action

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 

Senthil Balaji Case The court ordered the ed to take action

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று (30.04.2024) காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி வரை 36 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதோடு சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்