![vijay makkal iyakkam womens team meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/I098jKJAkYBoI29H7iEL8IhWW3ls23RgKtpudhYDQ-s/1694253972/sites/default/files/inline-images/176_19.jpg)
விஜய்யின் மக்கள் இயக்கம், சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது.
இதையடுத்து இன்று மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் தலைமையில் நடைபெறுவதாக சில நாட்கள் முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 2000 பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாதம் ஒருமுறை உறுப்பினர் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள், களப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுதல், தளபதி பயிலகத்தில் ஆசிரியர்களாக செயல்பட வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அக்கூட்டத்தில் ஒரு நிர்வாகி, "நாங்க எல்லாரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். அவரை மீட் பண்ணனும். நான் பயங்கர விஜய் ரசிகை..." என புஸ்ஸி ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த ரசிகை விஜய் எனச் சொன்னதும், குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த், "தலைவன் பெயரை சொல்லக் கூடாது. தளபதின்னு மட்டும் தான் சொல்லணும்" எனக் கட்டளையிட்டார். பின்பு தொடர்ந்து பேசிய அந்த ரசிகை, "எங்கள் வீட்டில், என்னுடைய பையன் பேரு தளபதின்னு தான் வச்சிருக்கோம்" என்றார்.