Skip to main content

கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை வைத்து லட்சக் கணக்கில் பண மோசடி; ஆசையால் மோசம் போன இளைஞர்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

using keerthy suresh photo as dp women fooled a boy over 40lakh rupees in karnataka

 

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக தற்போது கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம், விஜய்ப்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் இளைஞர் பரசுராமன். இவர் ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிகள் தொடர்பான தேர்வுக்கும் படித்து வருகிறாராம். 

 

இதனிடையே பரசுராமனுக்கு ஃபேஸ்புக்கின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம் கொண்ட ஒரு ஐடியிலிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருக்கிறது. ஆனால் முகப்பு பக்கத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது பரசுராமனுக்கு தெரியவில்லை. வேறொரு பெண் தன்னுடன் நட்பாக வேண்டும் என எண்ணுவதாக நினைத்து அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பு இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். பிறகு அந்த ஐடியிலிருந்து பரசுராமனின் வாட்ஸ் அப் நம்பரை கேட்க, அவரும் கொடுத்துள்ளார். வாட்ஸ் அப்பில் சாட் செய்த பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர். 

 

தான் ஒரு கல்லூரி படிக்கும் இளம்பெண் என்றும், தன் படிப்பிற்காக உதவி செய்யுங்கள் என்றும் அந்தக் காதலி கேட்க, தன் காதலி கேட்பதால் பணம் கொடுத்துள்ளார் பரசுராமன். இதனைத் தொடர்ந்து அடிக்கடி அந்தக் காதலி சில காரணங்களால் பணம் கேட்க மனதுக்கு விருப்பமான பெண்ணுக்குத்தானே கொடுக்கிறோம் என பரசுராமனும் தந்துள்ளார். ஒருநாள் பரசுராமனிடம் அந்தக் காதலி, ஆசை வார்த்தை பேசி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ அனுப்ப சொல்லிக் கேட்டுள்ளார். உடனே பரசுராமனும் அனுப்ப அந்த வீடியோவை அந்தக் காதலி ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். 

 

இதையடுத்து அந்த வீடியோவை வைத்து அந்தக் காதலி பரசுராமனை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் பரசுராமனுக்கு தான் தவறு செய்ததை உணரத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து அந்தக் காதலி பிளாக் மெயில் செய்ய, சுதாரித்துக்கொண்ட பரசுராமன், கடந்த மாதம் 15-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்தக் காதலி ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

மேலும் மஞ்சுளா ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவர் என்றும் இந்த பண மோசடிக்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பண மோசடியில், சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ள மஞ்சுளா அதை வைத்து 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கியுள்ளார். அதோடு வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். மஞ்சுளாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சுளாவின் கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.