Skip to main content

“தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை” - மன்சூர் அலிகான் பேட்டி

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

trisha issue mansoor ali khan press meet after investigation

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

 

ad

 

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். 

 

இந்த நிலையில் திடீரென்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு ஆஜராக வருகை தந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் முன் விளக்கமளித்தார். அதை எழுத்து பூர்வமாக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 நிமிடம் இந்த விசாரணை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் ரொம்ப மதிக்கிறேன்” என்றார். 

 

மேலும் போலீஸாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் ஜாலியாகத் தான் பேட்டி கொடுத்தேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தமடைந்திருந்தால் நானும் மன வருத்தமடைகிறேன். நான் நாளை தான் ஆஜராகவிருந்தேன். ஆனால் நான் தலைமறைவாகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி வெளியானது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதற்காக தான் இன்றே ஆஜரானேன். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக தயராக உள்ளேன்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகளவில் கவனம் - பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட பிரபலங்கள்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
actors support palestine by sharing all eyes on rafah poster

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்ததாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் தேதி இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர், ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால், அங்கு எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. போர் சூழல் ஏற்படும் அபாயம் இருந்ததால், காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

actors support palestine by sharing all eyes on rafah poster

இந்த நிலையில், இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 45 பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் பரவலாக பேசப்பட, பலரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

actors support palestine by sharing all eyes on rafah poster

அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரபா’  ‘ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா, மாதுரி தீக்‌ஷித், சோனம் கபூர், இலியானா,  ரகுல் ப்ரீத் சிங், மலைக்கா அரோரா, நோரா ஃபதாஹி என பலரும் இருக்கும் நிலையில் அவர்களோடு விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என மொத்தம் 3 கோடிக்கும் அதிகமானோர் கடந்த 24 மணிநேரத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளனர். 

Next Story

பிரபல பாடகியின் பயோ- பிக்; பரிசீலனையில் டாப் நடிகைகள்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
trisha, nayanthara, rashmika are talks in ms subbulakshmi biopic

கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சியவர் பிரபல பின்னணிப் பாடகி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இசை ரசிகர்களால் எம்.எஸ் சுப்புலட்சுமி என அறியப்படும் இவர், சிறுவயதிலேயே கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவைகளை கற்றுக் கொண்டார். பின்பு தனது தாயின் கச்சேரியில் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து அவரது அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னையில் கச்சேரி நடத்திய எம்.எஸ் சுப்புலட்சுமி திரைப்படங்களில் நடிகையாகவும் அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு, விலகிய அவர், இந்திய கலாச்சார தூதராக, லண்டன், நியூயார்க், கனடா என உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடத்தினார்.   

இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பாரத் ரத்னா விருது வாங்கிய முதல் பாடகர் என்ற பெருமையை எம்.எஸ் சுப்புலட்சுமி பெற்றார். மேலும் பத்ப பூஷன், பத்ம விபூஷன், இந்திரா காந்தி விருது என பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 2004 டிசம்பர் 11 அன்று மறைந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

trisha, nayanthara, rashmika are talks in ms subbulakshmi biopic

2025 இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் த்ரிஷா, நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகளில் யாராவது ஒருவர் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.