
கடந்த 1ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மட்டுமின்றி நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தற்போது நிலைமை குறித்து பேசப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, தயாரிப்பாளர்கள் பேசுகையில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி ஊழியர்களைப் போலவே சம்பளம் வழங்கப்படும் என்றும், உதவியாளர்களின் மற்ற தேவைகளை அந்தந்த நடிகர்களே அவர்களது சம்பளத்தில் இருந்து வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நடிகர் சூர்யா பேசும் போது, தனது உதவியாளரின் சம்பளத்தை தானே வழங்குகிறேன் என்று உறுதி அளித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் விஷாலும் தங்களது உதவியாளர்களின் சம்பளத்தை தாங்களே வழங்குவதாக தெரிவித்தனர். இதன்மூலம் தயாரிப்பாளருக்கு 10 முதல் 15 லட்சம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. எனினும் நாயகர்களை விட நாயகிகளே நிறைய உதவியாளர்களை வைத்திருக்கின்றனர். நாயகிகளும், உதவியாளர்கள் சம்பளம் விஷயத்தில் கணிசமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் தயாரிப்பாளர்களின் சுமை மேலும் குறையும் என்று தயாரிப்பாளர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.