![director rk selvamani car glass attacked by someone](http://image.nakkheeran.in/cdn/farfuture/G9t17_fInZllCVOL0XNcNLb0Uu3AOlKlRmnrWktOLKc/1667025617/sites/default/files/inline-images/24_42.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர்.கே. செல்வமணி தற்போது திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்.கே. செல்வமணி சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்பாள் தெருவில் வசித்து வருகிறார். தனது காரை வீட்டில் நிறுத்திவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். தனது வேலையை முடித்து மீண்டும் வீட்டிற்கு வந்த ஆர்.கே. செல்வமணி சேதப்படுத்தப்பட்ட தனது காரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.கே. செல்வமணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் கடந்த மாதம், நடிகர் விஷாலின் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். விஷால் நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் வீட்டைத் தொடர்ந்து ஆர்.கே. செல்வமணி வீட்டிலும் கல்வீச்சு நடைபெற்றுள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.