Skip to main content

அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த அருள்நிதி!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

dejavu

 

அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரிக்க, பி.ஜி. முத்தையா இணைதயாரிப்பு செய்கிறார். இப்படத்தில் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். 

 

கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அருள்நிதி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுசெய்துள்ளது. 

 

படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைவில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு மும்முரம் காட்டிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய அருள்நிதி படக்குழு

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Arulnidhi

 

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர்.

 

'தேஜாவு' வெற்றி குறித்து அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து, இதனை வெற்றிப் படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 'தேஜாவு'  திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.

 

படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் விஜய் பாண்டி கூறுகையில் "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றிப் படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதிக்கும், இதனை தரமான படமாக அளித்த இயக்குநர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டீசர், ட்ரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

"தம்பி தவறவிட்ட 'நெஞ்சுக்கு நீதி' யை கைப்பற்றிய உதயநிதி" - ரகசியத்தைப் பகிர்ந்த ஆரி !

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

actor aari talk about nenjukku needhi movie

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக சாதி அரசியல் படம் அல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு  நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னாடி சாதி இருக்கு. ஆனா இங்க பெயருக்கு பின்னாடி சாதி இல்லை.  அப்படி இருக்கையில் நீங்க ஏன் இப்படி சாதியை தூண்டுகிற வகையில் படம் எடுக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் , ஆனால் நம் மனதில் சாதி அப்படியே தான் இருக்கிறது. சாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை.  அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தம்பி அருள் நீதி தவறவிட்ட இந்த படத்தை அவரின் அண்ணன் நடித்து 'நெஞ்சுக்கு நீதி'யில் இருக்கும் சமூக நிதியை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.