2015-ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. சி.வி.குமார் மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக மியா ஜார்ஜூம், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் திரைக்கதைக்காக படக்குழுவினரை திரை விமர்சகர்கள் உட்பட பலரும் பாராட்டியிருந்தனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
இதனிடையே 'இன்று நேற்று நாளை' படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஹாட்ஸ்டாருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " அன்பான வேண்டுகோள். இந்த குறைந்த தெளிவுத்திறனுக்குப் பதிலாக 2k, 5.1-இல் எங்கள் “இன்று நேற்று நாளை” படத்தை மீண்டும் பதிவேற்ற முடியுமா " என்று ஹாட்ஸ்டாரை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஹாட்ஸ்டார் நிறுவனம் 'உங்கள் கோரிக்கையை பற்றி எங்கள் டீமுடன் பேசுவோம்' என குறிப்பிட்டுள்ளது.
ரவிக்குமார், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.