இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் இதுவரை 145 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இவர் இன்றைய தலைமுறையினருக்கும் ஃபேவரட் இசையமைப்பாளராக உள்ளார். இந்திய மொழிகளை தாண்டி பல மொழிகளில் பணியாற்றிவரும் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'வெந்து தணிந்தது காடு', உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30-ஆம் தேதியும், 'கோப்ரா' வருகிற 31-ஆம் தேதியும், 'வெந்து தணிந்தது காடு' செப்டம்பர் 15-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கனடா நாட்டில், ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், மர்காம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். அந்த அறிக்கையில், "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கடவுளின் குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்." என குறிப்பிட்டு பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதே போல் கடந்த 2013-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு 'அல்லா-ரக்கா ரஹ்மான்' என்ற பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi— A.R.Rahman (@arrahman) August 29, 2022