Skip to main content

நெஞ்சை உலுக்கிய ஹாசினி பாலியல் கொலை வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 15

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 15

 

தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான வழக்கு ஒன்று குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விவரிக்கிறார்.

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட்ட, ஹாசினி என்கிற 7 வயது பெண் குழந்தை கொல்லப்பட்டது குறித்த வழக்கு இது. அனைத்து பெற்றோர்கள் மனதிலும் பயத்தை ஏற்படுத்திய வழக்கு இது. 2017 ஆம் ஆண்டு நடந்தது இந்த சம்பவம். அந்த பெற்றோருக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரு குழந்தைகள். ஒருநாள் வெளியே சென்று அவர்கள் வீடு திரும்பியபோது குழந்தையைக் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடினார்கள். அதே அப்பார்ட்மெண்டில் தஷ்வந்த் என்கிற இளைஞன் இருந்து வந்தான். அவனுடைய பெற்றோரால் அவன் செல்லமாக வளர்க்கப்பட்டான். 

 

அந்த வயதிலேயே சூதாட்டம், பாலியல் தொழிலாளர்களோடு தொடர்பு என்று பல்வேறு கெட்ட பழக்கங்கள் அவனுக்கு இருந்தன. அதனால் அவனுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அவன் ஒரு நாய்க்குட்டி வளர்த்தான். அந்த நாய்க்குட்டியோடு விளையாட வரும் குழந்தைகளிடம் தவறாக நடப்பதே அவனுடைய நோக்கம். ஒருநாள் ஹாசினியையும் அவன் வீட்டுக்கு அழைத்து வந்தான். அந்தக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தான். கதறிய அந்தக் குழந்தையின் மீது பெட்ஷீட்டை வைத்து அழுத்தினான். குழந்தை இறந்துபோனது. குழந்தையை ஒரு பைக்குள் அடைத்து வண்டியில் வைத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்று எரித்தான். காவல்துறையினர் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர். 

 

சிசிடிவி காட்சிகளை ஆராய முடிவு செய்தனர். சம்பவம் நடந்த நேரத்தின்போது ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு அவன் வெளியே சென்றது தெரிந்தது. திரும்ப வரும்போது பை இல்லாமல் வந்தான். அதை வைத்து அவனை அழைத்து விசாரித்தனர். முதலில் அவன் மறுத்தான். இனி மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். அவனுடைய வீட்டை சோதனை செய்தபோது, குழந்தையின் தோடு, கால் சலங்கை மற்றும் உள்ளாடைகள் கிடைத்தன. அவன் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது. ஆனால் வக்கீல்கள் மூலம் அவன் அதை உடைத்து பிணையும் பெற்றான். 

 

இப்போது அவன் வழக்குக்கு மட்டும் ஆஜராகி வருகிறான். ஒருமுறை அவன் நீதிமன்றத்துக்கு வந்தபோது பெண்கள், மகளிர் அமைப்பினர் அனைவரும் சேர்ந்து அவனைத் தாக்கினர். நீதிமன்றத்தில் அவன் சாமர்த்தியமாக வாதாடினான். அவனை வெளியே கொண்டு வருவதற்கு அவனுடைய பெற்றோர் நிறைய செலவு செய்தாலும், அவன் செய்த செயலை நினைத்து அவர்களுக்கும் மனம் உறுத்தியது. இதனால் ஒருநாள் அவனுக்கும் அவனுடைய அம்மாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பாவும் அடிக்கடி திட்டினார். இதனால் அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தான்.