Skip to main content

டி20 உலகக் கோப்பை தொடர்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
T20 World Cup Series; South Africa advanced to the finals

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியாகத் தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சால் 11வது ஓவரின் 5வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்தது. 

T20 World Cup Series; South Africa advanced to the finals

அதனைத் தொடர்ந்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் களம் இறங்கினர். அதன்படி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ஓவர்களில் 60 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதன்படி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. மேலும் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானைத் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்கா அணி 7 முறை அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இன்றைய டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளது.

அதே சமயம் டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்களே இப்போது வரை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்று (27.06.2024) இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது. 

 

Next Story

“நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும்” - அமிதாப் பச்சன் உருக்கம் 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024

 

Amitabh Bachchan said about t20 world cup 2024

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். 

இந்த நிலையில், நான் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பிளாக் (Blog) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா!!! T20 WORLD CUP 2024. உற்சாகம், உணர்ச்சிகள் மற்றும் பயம் என எல்லாம் முடிந்தது. எப்போதும் போல இந்த இறுதிப் போட்டியை நான் டி.வியில் பார்க்கவில்லை. நான் இறுதிப் போட்டியைப் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடுகிறது. இனி எதுவும் எனது பெருமூளைக்குள் நுழையாது. இந்திய அணியினர் சிந்திய கண்ணீருக்கு இசைவாக நம் கண்களிலும் நீராய் ஓடியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொலைக்காட்சியில் இந்திய அணி விளையாடும் போட்டியை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலாவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Prize money announcement for Indian cricket team

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே உலகக் கோப்பை 2024-ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா  ஆகிய மூவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.