Skip to main content

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

india vs england

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால் இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதற்குப் பிறகு ஆடிய இந்திய அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் ரோகித், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்து (101 ரன்கள்) ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 60 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 294 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றிருந்தது. இந்தநிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (06 மார்ச்) தொடங்கியது. வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஜோடி சிறப்பாக ஆடி 106 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அக்ஸர் படேல் 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த இஷாந்த் சர்மாவும், சிராஜூம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் 365 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இதனால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் அதனைத் தவறவிட்டார். 96 ரன்களில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் பின்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கியது இங்கிலாந்து. வழக்கம்போல இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்குத் திணறி ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ் 50 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 135 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் அக்ஸர் படேல் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இந்த வெற்றி மூலம், 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா.