Skip to main content

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா, வருண் சக்கரவர்த்தி சந்தேகம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

bumrah

 

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் நான்காம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 இருபது ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்திய இருபது ஓவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்திக்கு, யோ-யோ டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சியடையவில்லை. ஏற்கனவே இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில், வருண் சக்கரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தற்போது உறுதி செய்துள்ளார். யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய பும்ரா, இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது. பும்ராவிற்கு ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.