Skip to main content

இந்தியத் தேர்தலில் தலையிடலா?; ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
US responds to Russia accusations on Meddling in Indian Elections?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதனிடையே, சர்வதேச நாடானா அமெரிக்க அரசின் கீழ் இயங்கும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம்(யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்கிற அமைப்பு இந்த ஆண்டின் மத சுதந்திரம் தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கடந்த 5ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்திற்கான நிலையைக் கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில்,  இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக கூறி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையை நிராகரித்தது. 

இந்த நிலையில், இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இது தொடர்பாக, ரஷ்யா நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு குறித்த புரிதல் இல்லாமல் அமெரிக்கா பேசி வருகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. புதுடெல்லிக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை நாம் காண்கிறோம். அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல, பல மாநிலங்களையும் ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டுவதை நாம் காண்கிறோம். இதன் காரணம், இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை சமநிலையில் வைக்க முயல்கிறார்கள். இது இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதன் ஒரு பகுதியாகும்” என்று கூறினார். 

ரஷ்யாவின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நிச்சயமாக இல்லை, உலகில் எங்கும் தேர்தல்களில் ஈடுபடாதது போலவே இந்தியாவின் தேர்தலிலும் தலையிடவில்லை. இவை இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவுகள்” என்று விளக்கம் அளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்