கிருமிநாசினி சிகிச்சை குறித்து ட்ரம்ப் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக வெப்பநிலை, ஈரப்பதம் உள்ள சூழலில் கரோனா வைரஸ் விரைவாக உயிரிழக்கிறது எனக் கண்டறியப்பட்டது. மேலும் ஐசோபுரொபைல் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியைக் கொண்டு பொருட்களைச் சுத்தம் செய்தால், 30 வினாடிகளில் கரோனா வைரஸ் இறந்துவிடும் எனவும் கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய ட்ரம்ப், "அதிக வெப்பம் மற்றும் ஒளியைக் கொண்டு கரோனா பாதித்தவர்களைச் சிகிச்சைக்கு உட்படுத்திப் பார்க்க முயற்சி செய்ய மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதோடு இல்லாமல், கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்திச் சிகிச்சையளிக்க முடியுமா எனவும் பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகக் கேட்டார். ஆனால் அவரின் இந்த யோசனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்த முடியுமா எனக் கிண்டலுக்காகத்தான் கேட்டேன் என அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் இவ்விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத இணையவாசிகள், உலகின் மிகப்பெரிய நாட்டின் அதிபராக இருந்துகொண்டு, இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரது பொறுப்பற்றத்தன்மையை காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.