Skip to main content

ஒரே ஒரு ட்வீட்டால் ஒரு லட்சம் கோடியை இழந்த எலன் மஸ்க்...

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

elon musk loss 14 billion dollars in one tweet

 

ஸ்பேஸ்- எக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலன் மஸ்க், தனது ஒரே ஒரு ட்வீட் காரணமாக, தனது டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். 
 

பணம் சம்பாதிப்பதில், புதிய யோசனைகளை மற்றும் தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதிலும் பெயர்பெற்ற நிறுவனங்களான டெஸ்லா, ஸ்பேஸ் - எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலன் மஸ்க் அவ்வப்போது சர்ச்சையான வகையில் பேசி யாரிடமாவது சிக்கிக்கொள்வது வாடிக்கை. அந்த வகையில் நேற்று அவர் பதிவிட்ட ஒரு ட்வீட் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் எனக் கூறி ஒருசில அமெரிக்கர்கள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எலன் மஸ்க் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "டெஸ்லா பங்கு விலை மிக அதிகமாக உள்ளது. நான் கிட்டத்தட்ட எனது எல்லா சொத்துக்களையும் விற்கிறேன். என்னிடம் வீடு கூட இல்லை. மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்குங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.
 

http://onelink.to/nknapp


போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்ட இந்த ட்வீட், டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின, அதன் காரணமாகப் பங்குகள் விலை கிடுகிடுவெனச் சரிய ஆரம்பித்தது. இந்த ட்வீட் பதிவிடப்பட்ட சில மணிநேரத்திலேயே டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 141 பில்லியன் டாலரிலிருந்து 127 பில்லியன் டாலர்கள் வரை குறைந்தது. தான் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவால் அவரது நிறுவனத்தின் மதிப்பில் சுமார் 14 பில்லியன் அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளார் எலன் மஸ்க்.

 

 

 

சார்ந்த செய்திகள்