Skip to main content

'சர்வதேச அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்'-அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரான் கருத்து

Published on 22/06/2025 | Edited on 22/06/2025
 'Direct threat to international peace' - Iran's view on US attack

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே சில மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அணு குண்டுகளை தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கும் வகையில் ஈரானோடு அணு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது.

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால், கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

 'Direct threat to international peace' - Iran's view on US attack

ஃபார்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான் உள்ளிட்ட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்து பேசுகையில், 'ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்து விட்டோம். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும்.  இந்த நிலை தொடரவே கூடாது. அமைதி நிலவ வேண்டும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு என் வாழ்த்துகள். ராணுவத்தினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முன்னணி நாடு ஈரான். ஈரான் மீதான இந்த தாக்குதல் ஒரு அற்புதகரமான ராணுவ வெற்றி. ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளை உள்ளன ஒன்று அமைதி அல்லது பெருந்துயரம்' என எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.

இந்நிலையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுள்ள தகவலில், 'அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தலங்கள் மீதான தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். ஈரானுக்கு எதிரான ஆபத்தான ஆக்கிரமிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் நிலவியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. செரிவூட்டப்பட்ட யுரேனியங்கள் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை' என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வான் பரப்பை இஸ்ரேல் மூடி உள்ளதாக மறுபுறம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

a

சார்ந்த செய்திகள்