![ஹ்](http://image.nakkheeran.in/cdn/farfuture/ywbdQ8Uo3_j6ygCK_82Xq9vy-ymcwmHjxLzhu33QVsI/1586682717/sites/default/files/inline-images/hi_6.jpg)
கொடிய நோயாம் கொரோனா வுக்கு
கடிவாளம் போடும் கரங்களை வணங்குவோம்!
உண்ண மறந்தும் உறங்க மறந்தும்
எண்ணரும் மருத்துவர் இயங்குகின் றார்கள்;
சுணக்கம் இன்றிச் செவிலியர் தாமும்
இணக்கமாய்ச் சேவையில் இறங்கியுள் ளார்கள்;
தூய்மைப் பணியில் துப்புர வாளர்கள்
ஓய்விலா துழைத்தே உடல்நோ கின்றார்.
![ப்](http://image.nakkheeran.in/cdn/farfuture/ap6vcRYYJvPVKSGbBAvPPsIN3k32eDkSAr4as6eOKy0/1586683089/sites/default/files/inline-images/bbb_1.jpg)
*
கண்துயி லாமல் காவல் துறையினர்
தன்னலம் இன்றித் தங்கள் உழைப்பால்
ஊரடங் கிற்கே உறுதுணை செய்து
கோரத் தொற்றையும் குறைந்திடச் செய்கிறார்!
இவர்போல் பலரும் இடரினை நீக்கத்
தவம்போல் சேவையில் தாம்மூழ்கி யுள்ளார்!
*
தங்கள் வீட்டையும் தங்கள் உறவையும்
தங்கள் சுகத்தையும் தங்கள் ஓய்வையும்
கொஞ்சமும் கருதாமல் கொரோனா ஒழிய
நெஞ்சார உழைத்திவர் நெகிழ வைக்கிறார்.
![ச்](http://image.nakkheeran.in/cdn/farfuture/mgctqEkGvTipM8gd3LvmogiVtsREqsGG2vU40xvzgXA/1586682753/sites/default/files/inline-images/co_3.jpg)
*
பேருக்கு இவர்தம் பெருமையைப் பேசி
ஊருக்கு முன்னால் உயர்த்தினால் போதுமா?
அரசாங்கம் இவர்களின் அரணாய் நின்று
தரமான காப்பினைத் தந்திட வேண்டும்!
தொற்று மிகுந்தால் தொல்லையும் சுமையும்
தொற்றிக் கொண்டு துன்பம் பெருக்கும்!
உடனாய் இங்கே ஊர டங்கினை
அடம்பிடிக் காமல் அதிகரிக்க வேண்டும்!
*
தொற்றுள் ளோரைத் துரிதமாயக் கண்டு
உற்ற மருத்துவ உதவிகள் செய்தபின்
தாழ்பாள் திறந்து தடைகள் நீக்குக!
ஆழ்ந்த கவனம் ஆள்வோர்க்கு வேண்டும்!
![ி](http://image.nakkheeran.in/cdn/farfuture/q7IrUsyJMDaEnq1lwyaR4pr2SpQfRJA_8KfPZIHiSpc/1586683230/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif%20-%20Copy_8.gif)