Skip to main content

சூடானில் இருந்து 500 இந்தியர்கள் மீட்பு; வெளியிடங்களில் சிக்கியவர்களுக்கும் புதிய உத்தரவு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

500 Indians trapped in Sudan rescued!!

 

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

 

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில், மீண்டும் கடந்த சில தினங்களாக சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப் போர் நடந்து வந்தது. இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது.

 

இந்தப் போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத் தூதரகம் சார்பில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் சூடானில் சிக்கிய இந்தியர்களில் 500 பேர் துறைமுகம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துறைமுகத்தில் இருந்து 500 பேரையும் இந்திய போர்க்கப்பல் மூலமாக சவுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் இந்தியர்கள் வரை சூடானில் சிக்கி இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக அதில் 500 பேர் மீட்கப்பட உள்ளனர். 

 

சவுதியில் இருந்து இந்திய விமானப்படை விமானங்களின் மூலம் 500 இந்தியர்களும் தாயகம் அழைத்து வரப்படலாம் எனக் கூறப்படுகிறது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் போர்ட் சூடான் என அழைக்கப்படும் சூடான் துறைமுகத்திற்கு வரும்படியும் அங்கிருந்து அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்